1967 ஹிஸ்டரி ஞாபகமிருக்கா? இப்ப அதே பொலிட்டிக்கல் ரீசெட்.. ஆடிப்போய் கிடக்கும் கோட்டைகள்
சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் 1967-ம் ஆண்டு என்பது ஒரு சாதாரண மாற்றமல்ல. அது ஒரு சகாப்தத்தின் தொடக்கம் என்றே சொல்லலாம்.. அதை ஏன் இப்போது சொல்ல வேண்டியிருக்கிறது? விஷயம் இல்லாமல் இல்லை.. 2026 சட்டமன்றத் தேர்தல், தமிழக வரலாற்றில் 1967-க்கு அடுத்தபடியாக ஒரு மிகப்பெரிய Political Reset ஆக மாறப்போவதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன.. இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
காங்கிரஸ் ஆட்சியை அண்ணா தலைமையிலான திமுக வீழ்த்திய அந்த புள்ளி, அடுத்த 50 ஆண்டுகால தமிழக அரசியலை இரண்டே துருவங்களுக்குள் சுருக்கிவிட்டது.

திமுக அல்லது அதிமுக - இந்த இரண்டை தாண்டி ஒரு 3வது சக்தி ஆட்சி அதிகாரத்தை நெருங்குவது என்பது எட்டாக்கனியாகவே இருந்து வந்தது. ஆனால், இப்போது களம் மாறத் தொடங்கியிருக்கிறது.
இப்போது பிரதான எதிர்க்கட்சியான அதிமுக சந்தித்து வரும் உட்கட்சி மோதல்களும், தொடர் தேர்தல் சரிவுகளும் அக்கட்சிக்கு ஒரு மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கி வருகின்றன. இதைத்தான் தங்களுக்கு சாதகமாகவும், சரியாகவும் பயன்படுத்திக்கொண்டு உள்ளே நுழைந்திருக்கிறது தமிழக வெற்றிக் கழகம்...
அதிமுகவின் கோட்டை சைலண்ட் ஷிப்டிங்
குறிப்பாக அதிமுகவின் கோட்டைகளாகக் கருதப்படும் கொங்கு பெல்ட்டில், சைலண்ட் ஷிப்டிங் நடந்து வருவதாக தெரிகிறது.. இதுவரை இரட்டை இலைக்கு விசுவாசமாக இருந்த இளைஞர்கள் மற்றும் குறிப்பிட்ட சமூக வாக்குகள் இப்போது தவெக பக்கம் சாயத் தொடங்கியிருப்பது அதிமுகவுக்கு நிஜமாகவே பெரிய தலைவலி. அதிமுக இந்த வேகத்தை சமாளித்து தனது இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளுமா என்பதுதான் இப்போது எழுந்துள்ள பிரதான கேள்வி.
அதேபோல திமுக எதிர்ப்பு வாக்குகளை அறுவடை செய்வதில் இதுவரை அதிமுகவுக்குப் போட்டியே இல்லாமல் இருந்தது. ஆனால், தவெகவின் வருகை அந்த வாக்குகளை அப்படியே கூறுபோடுகிறது. இது ஆளுங்கட்சியான திமுகவுக்கு சாதகமாக முடியும் என்று ஒருபுறம் கணிக்கப்பட்டாலும், மும்முனைப் போட்டி என்று வரும்போது வெற்றி தோல்விகள் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தலைகீழாக மாற வாய்ப்புள்ளது.
தென் மாவட்டங்கள் அரசியல்
அதேபோல தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை, ஜாதி மற்றும் உணர்வுப்பூர்வமான அரசியலைத் தாண்டி, ஒரு புதுமுக மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அங்கு நிலவும் இந்த மனநிலை தவெக போன்ற புதிய ப்ளேயர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிப்பதாக அமையும்.
இதற்கு முன்பு, இதேபோன்ற நிலை, விஜயகாந்த்துக்கு வந்தது.. ஆனால் அன்று விஜயகாந்தின் தேமுதிக ஏற்படுத்திய தாக்கத்தை விட, தவெகவின் தற்போதைய நகர்வுகள் அதிக வீச்சுடன் இருக்கின்றன. இது அதிமுகவை பலவீனப்படுத்துவதன் மூலம் தமிழகத்தில் ஒரு நிரந்தரமான மும்முனை அரசியலுக்கு வித்திடுகிறது.
1967 வரலாறு ஞாபகமிருக்கா
எனவே, இந்த முறை தேர்தல் ரிசல்ட்டானது, பாரம்பரிய அரசியல் கட்டமைப்பை உடைப்பதற்கான களமாகவே அமையபோகிறது.. அன்று 1967-ல் தொடங்கியது போலவே, மீண்டும் ஒரு புதிய அரசியல் அத்தியாயம் இங்கு எழுதப்படப்போகிறது.
இதில் யார் முந்தினாலும் சரி, தமிழக அரசியல் இனி பழையபடி இருமுனைப் பாதையிலேயே பயணிக்கும் என்று சொல்வதற்கில்லை. ஒரு புதிய சக்தி அதிகார மையத்தை நோக்கி நகர்வதை இனி யாராலும் தடுக்க முடியாது என்பதுதான் இன்றைய எக்ஸிட்போல் கணிப்பு & கள நிலவரம் சொல்லும் உண்மை... பொறுத்திருந்து பார்ப்போம...!!












Click it and Unblock the Notifications