செமஸ்டர் கட்டணம் கட்டாத மாணவர்களின் பெயர்கள் நீக்கம் - அண்ணா பல்கலைக்கு எதிராக மாணவர்கள் வழக்கு
செப்டம்பர் 5ம் தேதிக்குள் செமஸ்டர் கட்டணங்களை செலுத்தாத மாணவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்ற அண்ணா பல்கலைக்கழக உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளத
சென்னை: செப்டம்பர் 5ம் தேதிக்குள் செமஸ்டர் கட்டணங்களை செலுத்தாத மாணவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்ற அண்ணா பல்கலைக்கழக உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது.
அண்ணா பல்கலைகழகம் நடத்தும் அனைத்து படிப்புகளுக்கும், நடப்பாண்டு ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான செமஸ்டருக்கான கட்டணத்தை ஆகஸ்ட் 30ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும், தவறினால் அபராதத்துடன் சில படிப்புகளுக்கு செப்டம்பர் 3க்குள்ளும், சில படிப்புகளுக்கு செப்டம்பர் 5க்குள்ளும் செலுத்த வேண்டும் என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், இறுதி கெடுவுக்குள் கட்டணம் செலுத்த தவறும் மாணவர்கள், வகுப்புகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும், மாணவர்கள் பட்டியலில் இருந்து அவர்களின் பெயர் நீக்கப்பட்டு, செப்டம்பர் 7ம் தேதி அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும் எனவும் அண்ணா பல்கலைகழக பதிவாளர் ஆகஸ்ட் 5ம் தேதி சுற்றறிக்கை பிறப்பித்துள்ளார்.
இந்த சுற்றறிக்கையை ரத்து செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வீ. மாரியப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தனது மனுவில், கொரோனா ஊரடங்கு காலத்தில் பல மாணவர்களின் பெற்றோர் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் நிலையில் செமஸ்டர் கட்டணத்தை செலுத்த சொல்வதாக குற்றம்சாட்டபட்டுள்ளது. செமஸ்டர் கட்டணத்தில் 40 சதவிகிதம் மட்டுமே கல்வி கட்டணமாகவும், மீதமுள்ளவை ஆய்வுக கட்டணம், நூலக கட்டணம், கணினி மைய கட்டணம், இணையவழி சமூக கட்டணம் போன்ற கட்டணங்களாகவும் இருப்பதாகவும்,
மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கு உள்ள நிலையில், மாணவர்கள் பயன்படுத்தாதவற்றிற்கும் கட்டணம் செலுத்த சொல்லி கட்டாயப்படுத்தப்படுவதாகவும் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த 60 சதவிகித கட்டணத்தை வசூலிக்க தடைவிதிக்க வேண்டும் எனவும், கட்டணம் செலுத்தாவிட்டால் பல்கலைக்கழக மாணவர்களை நீக்கம் செய்யும் சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன் மனுதாரர் வழக்கறிஞர் திருமூர்த்தி ஆஜராகி முறையீடு செய்தார். அதனை ஏற்ற நீதிபதி, நாளை இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications