சென்னையில் மீட்கப்பட்ட கொத்தடிமைகள்.. அரை நூற்றாண்டு ஆகியும் தீராத துயரம்.. கவனம் கொள்ளுமா தமிழக அரசு
சென்னை: கேளம்பாக்கத்தில் கொத்தடிமைகளாக இருந்த இருளர் சமூகத்தை சேர்ந்த 17 பேர் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பேசு பொருளாகியுள்ளது. கொத்தடிமைக்கு எதிராக சட்டம் இயற்றி ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலம் ஆகியுள்ள நிலையில் தற்போதும் கொத்தடிமை முறை நீடித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வுகள் தொடங்கிய காலத்திலிருந்தே அடிமை முறை தொடங்கி விட்டது. மேலை நாடுகளில் நிற ரீதியாக ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட ஆப்பிரிக்க மக்கள் அடிமைகளாக நாடு கடத்தப்பட்டனர். இந்தியாவை பொறுத்த அளவில் அடிமை முறையானது சாதியின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டதாகும். பழங்குடியின, ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள்தான் பெரும்பாலும் கொத்தடிமைகளாக மாற்றப்படுகிறார்கள்.

வாழ்வாதாரத்திற்கு எந்த உதவியும் அரசு செய்யாதபோது இம்மக்கள் தன்முனைப்பாக வாழ தொடங்குகின்றனர். அப்படி இருக்கையில் எதிர்வரும் சாவல்களை சந்திக்க பொருளாதாரம் மிகவும் அவசியமானதாகும். ஆனால் இம்மக்களிடம் எதுவும் இல்லாததால் பொருளாதாரத்தை உருவாக்க முடியவில்லை. எனவே தங்களையோ அல்லாது தங்கள் குடும்பத்தை சேர்ந்த ஒருவரையோ அடமானமாக வைத்து அதற்கு உரிய பணத்தை பெற்று இவர்கள் வாழ தொடங்குகின்றனர். இப்படி அடமானமாக வைக்கப்பட்டவர்தான் கொத்தடிமையாக மாற்றப்படுகிறார்.
இவருக்கு என எந்த விருப்பு வெறுப்பும் இருக்கக்கூடாது. உணவு உடை என எல்லாமும் பணம் கொடுத்து இவரை வாங்கியவர் கொடுத்துவிடுவார். ஆண்டு கணக்கில் இவர்கள் சொல்லும் வேலையை செய்ய வேண்டும். இந்த சூழலில் உழைப்பு, பணம், பாலியல் என அனைத்தும் சுரண்டப்படும். எனவே இந்த கொடுமையை எதிர்த்து கடந்த 1976 கொத்தடிமை ஒழிப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டு சுமார் அரை நூற்றாண்டு காலம் ஆன பின்னரும் தற்போது வரை கொத்தடிமை முறை முழுமையாக ஒழிக்கப்படவில்லை.
செங்கல் சூளை, கல்குவாரி தொடங்கி வீட்டு வேலை வரை இந்த கொத்தடிமை முறை நீண்டிருக்கிறது. இது முற்றிலும் ஒழிக்கப்படாமல் இருப்பதற்கு காரணம் அரசின் மெத்தன போக்குதான். அதேபோல பலருக்கு கொத்தடிமை என்றால் என்ன என்று தெரியாமல் இருக்கிறது. அதாவது, 'கடன் அல்லது கடமைக்காக, ஒரு நபர் தன்னுடைய சட்டப்படியான குறைந்தபட்ச ஊதியம் பெறும் உரிமை அல்லது சுதந்திரமாக விருப்பப்பட்ட வேலையை செய்யும் உரிமை அல்லது விருப்பப்பட்ட இடத்திற்கு செல்லும் உரிமை அல்லது தான் உற்பத்தி செய்த பொருளை சந்தை விலைக்கு விற்பனை செய்யும் உரிமை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை இழந்தால் அவர் கொத்தடிமைத் தொழிலாளர் என்று கருதப்படுகிறார்' என்று அரசு தெளிவாக வரையறுத்துள்ளது.
ஆண்டு தோறும் குறிப்பிட்ட அளவில் கொத்தடிமைகள் மீட்கப்படுகிறார்கள் என்றும், எனவே கொத்தடிமை முறை வேகமாக அழிக்கப்பட்டு வருகிறது எனவும் அரசு தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால், அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் யாவும் போதுமானதாக இல்லை என்று தனியார் தொண்டு நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு இருக்கையில்தான் சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் கடந்த 3 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த இருளர் சமூகத்தை சேர்ந்த 17 பேர் இன்று மீட்கப்பட்டுள்ளனர். மரம் வெட்டும் தொழிலில் இவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் செங்கல்பட்டு கோட்டாட்சியர் இப்ராஹிம் இவர்களை மீட்டுள்ளார். கொத்தடிமைக்கு எதிராக சட்டம் இயற்றி அரை நூற்றாண்டு ஆன பின்னரும் கொத்தடிமை முறை ஒழிக்கப்படாமல் இருப்பது அதிர்ச்சியளிப்பதாக பொதுமக்கள் விமர்சித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications