ஆயுத பூஜைக்கு 3 நாட்கள் லீவு! சொந்த ஊர் செல்ல இன்றே தொடங்கிய ரயில் முன்பதிவு!
சென்னை: ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்வோர் வசதிக்காக ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது.
நீண்ட தூரம் பயணம் செய்யும் பயணிகளுக்கு வரபிரசாதமாக இருப்பது ரயில்கள்தான். குறைந்த கட்டணத்தில் எந்த வித அசதியும் அலுப்பும் இல்லாமல் பயணம் மேற்கொள்ள வசதியாக இருக்கிறது. இதனால்தான் இந்த பயணத்தை மக்கள் விரும்புகிறார்கள்.

இதனால் நாள்தோறும் ரயில்களில் முன்பதிவு செய்த பெட்டிகள், முன் பதிவு செய்யப்படாத பெட்டிகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதிலும் பண்டிகை காலங்களில் ரயில்களில் கூட்டம் அலைமோதும். பெரும்பாலும் பண்டிகை காலங்களில் சில மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்யப்படும்.
அதாவது 120 நாட்களுக்கு முன்பே ரயில் டிக்கெட் முன் பதிவு செய்யலாம், இதற்காக ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாக, டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்வார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு ஆயுத பூஜை வரும் அக்டோபர் 11 ஆம் தேதி வெள்ளிக்கிழமையும் அதற்கு மறுநாள் 12 ஆம் தேதி சனிக்கிழமை விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது.
ஆயுதபூஜையை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதனால் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவுகளை முன்கூட்டியே மேற்கொள்ள ஆயத்தமாகி வருகிறார்கள். அதன்படி ஆயுத பூஜை விடுமுறைக்காக அக்டோபர் 9-ஆம் தேதி புதன்கிழமை ஊருக்கு செல்வோர், இன்று முன்பதிவை மேற்கொள்ளலாம்.
அக்டோபர் 10ஆம் தேதி வியாழக்கிழமை ஊருக்கு புறப்பட்டுச் செல்வோர் வரும் 12 ஆம் தேதி முன்பதிவு செய்து கொள்ளலாம். அது போல் அக்டோபர் 11 ஆம் தேதி ஊருக்கு செல்வோர் வரும் 13 ஆம் தேதி முன்பதிவு செய்து கொள்ளலாம் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications