கன்னட மக்களின் இனப்பற்றை போற்ற வேண்டும்.. கர்நாடக தமிழர்களிடையே பதற்றம்! சீமானின் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கள் மாநிலக்கொடிக்கு பெருமதிப்பு தரும் கன்னட மக்களின் இனப்பற்றினைப் போற்றி, பின்பற்ற வேண்டுமே தவிர, புரிதலற்று வன்முறைச் செயல்களில் ஈடுபடுவது தேவையற்றது எனவும், தமிழ்நாட்டிற்கு தலைகுனிவையும், எதிர்மறை விளைவையும் ஏற்படுத்தும் இதுபோன்ற இழிசெயல்களில் இனிமேல் எவரும் ஈடுபட வேண்டாமென வலியுறுத்துவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," தமிழ்நாட்டில் திருப்பூர் அருகே சென்று கொண்டிருந்த கர்நாடக வாகனத்தை மறித்து, அதில், பொருத்தப்பட்டிருந்த கர்நாடக மாநிலக் கொடியை அகற்றச்சொல்லி, அதில் பயணித்தவரை தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலர் தாக்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

இதுபோன்ற புரிதலற்ற, தேவையற்ற வன்முறைச் செயல்கள் வன்மையான கண்டனத்துக்குரியது. கர்நாடக மாநில முதல்வர் இந்திய மூவர்ணக்கொடியை ஏற்றும் வேளையில், அருகிலேயே கர்நாடக மாநிலக் கொடியையும் ஏற்றுகின்றார்.

Seeman Kannada Kannadigas

சீமான் அறிக்கை

கர்நாடகாவைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சரே தன்னுடைய அரசு வாகனத்தில் இந்திய கொடியுடன், கர்நாடக மாநிலக் கொடியையும் பொருத்தியுள்ளார். கோலார் தங்கவயல் சுரங்கங்களில் அணுக்கழிவை பாதுகாக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டபோது இதே கன்னடக்கொடியை ஏந்தியே ஒற்றுமையுடன் தங்களின் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி அச்சதியை கன்னட மக்கள் முறியடித்தனர். அண்டை மாநிலங்களுடனான எல்லைச்சிக்கல், நதிநீர் சிக்கல், இந்தி திணிப்பு எதிர்ப்பு, வேலைவாய்ப்பு பறிப்பு உள்ளிட்ட எந்தவொரு மாநில உரிமைச்சார்ந்த பிரச்சனைகளிலும் கர்நாடக கொடியை ஏந்தியே கன்னட மக்கள் உரிமை மீட்கின்றனர்.

கன்னட மக்களின் இனப்பற்று

கர்நாடக உரிமைப்போராட்டங்கள் யாவிலும் சாதி, மதம், கட்சி பாகுபாடு இன்றி கன்னட மக்கள் அனைவரும் கட்சி கொடிகளை விடுத்து, மஞ்சள் சிகப்பு வண்ணங்களுடனான கர்நாடக கொடியை தங்களின் ஒற்றை அடையாளமாக்கி போராடும் அளவிற்கு அக்கொடி மிகுந்த முக்கியத்துவம் உடையதாகும். கன்னட மக்களின் உணர்வுடன் இரண்டற கலந்து, அவர்களது ஒற்றுமையின் அடையாளச் சின்னமாக திகழும் கர்நாடக மாநில கொடியை கன்னட மண்ணின் மைந்தர்கள் ஒவ்வொருவரும் மிகப்பெருமையோடு தங்கள் கைகளிலும், வீடுகளிலும், வாகனங்களிலும் பொருத்துகின்றனர். அது அவர்களின் அடிப்படை உரிமையுமாகும்.

கன்னட மாநிலக் கொடி

கன்னட மக்களின் அத்தகு இன உணர்வை மதித்து நாம் போற்ற வேண்டும். அவர்களிடமிருந்து இன ஓர்மையையும், மாநிலக் கொடிக்கான மாண்பையும் கற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, அதனை வெறுப்பதோ, அதற்காக தாக்குவதோ தேவையற்றதாகும். இத்தகு வன்முறையில் ஈடுபடுவோர்கள், கன்னட மக்கள் மீதும், கர்நாடக கொடியின் மீதும், உங்களின் எதிர்ப்பையும், வெறுப்பையும் காட்டுவதற்கு பதிலாக இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும், தமிழின் முதற் காப்பியமான சிலப்பதிகாரம் போற்றிய மூவேந்தர் இலட்சனை பொருந்திய தமிழ்நாட்டு கொடியை அங்கீகரிக்க மறுக்கும் தமிழ்நாடு அரசின் மீது உங்கள் எதிர்ப்பு இருந்திருக்க வேண்டும்.

தாக்குதல் சம்பவம்

60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டை மாறி மாறி ஆண்டும், தமிழ்நாட்டிற்கென்று தனித்த கொடி உரிமையை வாங்கி தராத திமுக, அதிமுக கட்சிகள் மீது உங்கள் கோபம் இருந்திருக்க வேண்டும். தமிழ்நாட்டு உரிமையை பறித்த பாஜக, காங்கிரசு, கம்யூனிஸ்ட் கட்சிகள் மீதும், அதற்கு துணைநின்றவர்கள் மீதும் உங்கள் வெறுப்பும், எதிர்ப்பும் இருந்திருக்க வேண்டும். அதனை விடுத்து தமிழ்நாட்டிற்கு வரும் அப்பாவி கன்னட மக்களை வெற்று வெறுப்புணர்வு கொண்டு தாக்குவதை ஒருபோதும் ஏற்க முடியாது.

கர்நாடக தமிழர்கள் பதற்றம்

ஒரு சிலரின் இதுபோன்ற தேவையற்ற அடாவடிச் செயல்களால் கர்நாடகாவில் எழுந்துள்ள பதற்றமும், இதை சாதகமாக பயன்படுத்தி கன்னட அமைப்புகள் சில, அங்குள்ள தமிழர்களுக்கு எதிராக செய்யும் வெறுப்பு பரப்புரைகளும் பெருங்கவலையைத் தருகிறது. எனவே, தமிழ்நாட்டிற்கு தலைகுனிவையும், எதிர்மறை விளைவையும் ஏற்படுத்தும் இதுபோன்ற இழிசெயல்களில் இனிமேல் எவரும் ஈடுபட வேண்டாமென வலியுறுத்துகிறேன்." என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+