தமிழ்நாட்டில் ரெஸ்டோ பார்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை.. அமைச்சர் விக்னேஷ்!
சென்னை: தமிழ்நாட்டில் ரெஸ்டோ பார் அமைப்பது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை என்று அமைச்சர் விக்னேஷ் விளக்கம் அளித்துள்ளார். துறையை சீரமைக்க சில ஆலோசனைகள், விவாதங்கள் மேற்கொள்ளப்படலாம் என்றும் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைத்தபின் 717 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. அதேபோல் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே பார்கள் செயல்பட அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் டாஸ்மாக் நிறுவனம் தரப்பில் ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி அளிக்க பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியது.

இதுதொடர்பான அறிவிப்பு சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அறிவிக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை எஃப்.எல்.1 உரிமம் டாஸ்மாக் கடைகளுக்கும், எஃப்.எல்.2 உரிமம் கிளப்பிற்கும், எஃப்.எல்3 உரிமம் நட்சத்திர தனியார் விடுகளுக்கும் வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் டாஸ்மாக் கடைகளுடன் இணைந்துள்ள பார்களின் எண்ணிக்கையை குறைக்கவும் தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.
அதற்கு பதிலாக ரெஸ்டோ பார்களின் எண்ணிக்கை அதிகரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் 54 புதிய பிராண்ட்களையும் கொள்முதல் செய்ய தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல் இருக்கிறது. இதன் மூலமாக வரியுடன் முறையாக ரெஸ்டோ பார்களை விரிவுபடுத்தி அரசின் வருவாயை உயர்த்த டாஸ்மாக் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் விக்னேஷ் பேசுகையில், ரெஸ்டோ பார்கள் குறித்து டாஸ்மாக் நிறுவனமோ அல்லது தமிழக அரசோ இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஊடகங்களில் வெளியானவை அதிகாரப்பூர்வமில்லாத வெறும் தகவல் மட்டும்தான் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் துறையை சீரமைக்க சில ஆலோசனைகள், விவாதங்கள் மேற்கொள்ளப்படலாம் என்றும் தெரிவித்துள்ளார். இதன் மூலமாக விரைவில் ரெஸ்டோ பார்கள் தொடர்பான அறிவிப்பு வெளியாகக் கூடும் என்று கருதப்படுகிறது.














Click it and Unblock the Notifications