சென்னை எலக்ட்ரிக் ட்ரெய்ன்ல போறீங்களா.. இன்றிலிருந்து புது ரூல்ச கண்டிப்பா கடைபிடிக்கனும்..
சென்னை: சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். குணமடைபவர்களின் எண்ணிக்கையும் தற்போது சரிந்து வருகிறது
பாதிப்பை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு என தமிழக அரசு கட்டுப்பாடுகளை அதிகரித்து வருகிறது. தொடர்ந்து கொரொனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மேலும் கட்டுப்பாடுகள் நீடிக்கப்படலாம் எனவும், கொரோனா தீவிரமானால் முழு ஊரடங்கும் அறிவிக்கப்படலாம் என்ற அச்சமும் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

தென்னக ரயில்வே
இதையடுத்து தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ரயில்வே துறை சார்பிலும் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கில் அத்தியாவசிய பணிகளை தவிர அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மெட்ரோ ரயில் சேவையும் சென்னையில் இயக்கப்படவில்லை அதே நேரத்தில் சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் மிகக் குறைந்த அளவே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

புதிய கட்டுப்பாடுகள்
மேலும் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் புதிய கட்டுப்பாடுகளையும் தெற்கு ரயில்வே அறிவித்தது அதன்படி 2 டோஸ் தடுப்பூசி போட்டு இருக்கும் பயணிகள் மட்டுமே புறநகர் மின்சார ரயில்களில் பயணம் செய்ய முடியும் எனவும் புறநகர் ரயில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் முகக்கவசம் அணியாமல் பயணித்தால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் முகக்கவசம் அணியாமல் ரயில் நிலையத்தில் சுற்றினாலும் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் புறநகர் ரயிலில் செல்பவர்கள் முப்பத்தி ஒன்றாம் தேதி வரை யுபிஎஸ் செயலில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுபாடுகள் அமலானது
இந்த நிலையில் ஜனவரி 10ஆம் தேதியான இன்று முதல் தெற்கு ரயில்வே விதித்த புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது புதிய கட்டுப்பாடுகள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என கூறியிருந்த நிலையில் இந்த கட்டுப்பாடுகள் இன்று முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து சென்னையின் பல்வேறு ரயில் நிலையங்களில் ரயில்வே போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கண்காணிப்பு
ரயில்வே நிலையங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ரயிலில் பயணம் செய்ய வரும் பயணிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பயணிகள் முகக்கவசம் அணிந்திருக்கிறார்களா, தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் உள்ளதா எனவும் சோதனை செய்து வருகின்றனர். விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளையும் போலீசார் மேற்கொண்டுள்ளனர். ரயில்வே பாதுகாப்புப் படை, தமிழக ரயில்வே போலீசார், சுகாதாரத்துறை அதிகாரிகள் இணைந்து இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications