ரூ 20 லட்சம் கோடி லஞ்ச பணத்தை பறிமுதல் செய்வேன்.. மத்திய சென்னை சுயேச்சை முன்னாள் நீதிபதி கர்ணன்
சென்னை: ரூ 20 லட்சம் கோடி லஞ்ச பணத்தை பறிமுதல் செய்து அரசு கருவூலத்தில் சேர்ப்பேன் என லஞ்ச ஒழிப்பு செயலாக்க கட்சியின் தலைவரும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான சி.எஸ்.கர்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் லோக்சபா தொகுதி வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி நடைபெறுகிறது. திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலுக்காக கடந்த 20-ஆம் தேதி வேட்புமனுதாக்கல் தொடங்கியது.

அது இன்றுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் நேற்று வரை லோக்சபா தேர்தலுக்காக 737 வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் தேமுதிக சார்பில் பார்த்தசாரதியும் திமுக சார்பில் தயாநிதி மாறனும் பாஜக சார்பில் வினோஜ் பி செல்வமும் நாம் தமிழர் சார்பில் டாக்டர் கார்த்திகேயனும் போட்டியிடுகிறார்கள்.
அது போல் இந்த லோக்சபா தொகுதியில் வேட்புமனுத்தாக்கலில் ஷெனாய் நகரில் உள்ல மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் நடந்தது. அப்போது 9 பேர் வரை இந்த தொகுதிக்கு வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இந்த நிலையில் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் உள்பட 8 பேர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், எனது கட்சியின் பெயர் லஞ்ச ஒழிப்பு செயலாக்க கட்சி. நான் 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலிலும் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்டேன். அப்போது பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டேன். தற்போது 2ஆவது முறையாக போட்டியிட விரும்புகிறேன்.
நீதித் துறை உள்பட பல்வேறு துறைகளில் லஞ்சத்தை ஒழிப்பதுதான் எனது நோக்கம். நான் தேர்தலில் வென்றால் 4 லட்சம் பேருக்கு அரசு வேலை கொடுப்பேன். ரூ 20 லட்சம் கோடி லஞ்ச பணத்தை பறிமுதல் செய்து அரசுக் கருவூலத்தில் சேர்ப்பேன் என தெரிவித்திருந்தார்.
பின்னணி என்ன: சென்னை மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக இருந்தவர் கர்ணன். இவர் ஓய்வு பெற்றுவிட்டார். ஆனால் அவரது பதவிக்காலத்தில் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்ற நீதிபதிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது.
இதனால் கர்ணன் மீது தமிழகம் , புதுவை பார் கவுன்சில் புகார் அளித்தது. அதன் பேரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த புகார் தொடர்பாக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில் கர்ணனை ஏன் கைது செய்யவில்லை என நீதிமன்றம் கேள்வி எழுப்பி அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தது. இதையடுத்து சென்னை ஆவடியில் இருந்த ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2020 ஆம் ஆண்டு கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications