பிரதமர் மோடி வரும் நேரத்தில் பாஜகவில் சலசலப்பு.. பொதுக்கூட்ட பண விவகாரத்தில் கட்சியினர் இடையே தகராறு
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு ஆட்களை அழைத்து வருவதற்கு வழங்கப்பட்ட பணம் தொடர்பான விவகாரத்தில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் மற்றும் விழுப்புரம் மாவட்ட தெற்கு மாவட்ட தலைவர் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதலால் விழுப்புரம் மாவட்ட பாஜகவில் சலசலப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி விட்டன. தேர்தல் பரப்புரை, தேர்தல் கூட்டணி, தொகுதிகளில் பங்கீடு போன்றவை தீவிரமாக நடந்து வருகின்றன. முன்பு முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்க மாட்டேன் எனக் கூறியிருந்த டிடிவி தினகரன், இரு நாட்களுக்கு முன்பு அதிமுக கூட்டணியில் இணைந்துவிட்டார். தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக, அன்புமணி தரப்பு பாமக, அமமுக, தமாக, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்திருக்கின்றன.

இன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். அவருடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஐஜேகேவின் பாரிவேந்தர், தமாகாவின் ஜி.கே.வாசன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஜான் பாண்டியன், புதிய நீதிக் கட்சியின் ஏ.சி.சண்முகம் மற்றும் புரட்சி பாரதம் கட்சியின் ஜெகன்மூர்த்தி உள்ளிட்ட தலைவர்கள் மேடையேற உள்ளனர்.
இந்த பிரமாண்ட மாநாட்டில் கலந்துகொள்ள விழுப்புரம் மாவட்டத்திலிருந்து தொண்டர்களை அழைத்து வர, கட்சி மேலிடம் சார்பில் ரூ. 3 லட்சம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த பணத்தைப் பகிர்ந்து கொள்வதில் மாவட்டத் தலைவர் தர்மராஜ் மற்றும் மாநில துணைத் தலைவர் ஏ.ஜி. சம்பத் ஆகியோரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் இந்தப் பிரச்சனை முற்றிய நிலையில், நேற்று காலை தர்மராஜின் வீட்டிற்குள் புகுந்த ஒரு கும்பல், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, பாஜக மாநில துணைத் தலைவர் ஏ.ஜி. சம்பத் மற்றும் மாவட்ட துணைத் தலைவர் தென்னரசு ஆகியோர் தனது வீட்டிற்கு ஆட்களை அனுப்பி வாகனங்களை அடித்து உடைத்து தனது சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததோடு, தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மாவட்டத் தலைவர் தர்மராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில், அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாஜக மாநில துணைத் தலைவர் ஏ.ஜி. சம்பத் மற்றும் தென்னரசு உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ள நிலையில், பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பொது இடத்திலேயே மோதிக்கொண்ட சம்பவம் அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications