நெல்வாயில் பெட்ரோல் குண்டு வீச்சு! விசிகவின் சாதிவெறி என்ற பாமக புகாருக்கு திருமா மறுப்பு!
சென்னை: ராணிப்பேட்டை அருகே முன் விரோதம் காரணமாக இளைஞர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டதாக பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இந்த நிலையில் அந்த சம்பவத்திற்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் எந்த தொடர்பும் இல்லை என திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி காவல் எல்லைக்கு உட்பட்ட நெல்வாய் கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன் இவர் தனியார் நிறுவனத்தின் டாடா ஏஸ் வாகன ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இதே பகுதியை சேர்ந்த ஓட்டுனர் விஜய கணபதியும் நண்பர்களாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று திருமால்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த தமிழரசன் மற்றும் விஜயகணபதி மீது மர்ம நபர்கள் திடீரென பெட்ரோல் குண்டு வடிவிலான பொருட்களை வீசி உள்ளனர்.
இதில் தீக்காயங்களுடன் அலறிய இருவரும் அருகில் இருந்த நீர் மற்றும் மணல் ஆகியவற்றில் விழுந்து தப்பித்துள்ளனர். அதற்குள் தமிழரசனுக்கு 60 சதவீதத்திற்கு மேல் தீக்காயங்களும் விஜய கணபதிக்கு 30 சதவீத தீக்காயங்களுடன் பாதிக்கப்பட்டனர். தகவல் அறிந்து அவரது உறவினர்கள் உடனடியாக மீட்டு காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களை பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்," ராணிப்பேட்டை மாவட்டம் நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த 2 பாமக இளைஞர்களை விசிகவினர் கொடூரமான முறையில் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி இருக்கின்றார்கள். இதை செய்தவர்கள் அருகில் உள்ள திருமால்பூர் சேர்ந்த பிரேம் உள்ளிட்ட ஆறு ஏழு நபர்கள் இவர்கள் அனைவரும் விசிகவை சேர்ந்தவர்களும் அனுதாபிகளும். பிரேம் என்கிற நபர் மீது ஐந்தாறு வழக்கு இருக்கிறது.
கொலை வெறி தாக்குதல் உள்ளிட்ட வழக்குகள் அவன் மீது இருக்கிறது. தேடப்படும் குற்றவாளி அவன். ஆனால், காவல்துறையினர் அவனை அப்படியே கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார்கள். அவன் பெட்ரோல் ஊற்றி கொடுத்த மனநிலைக்கு வந்தது காரணமே தமிழக அரசும் காவல்துறையும். கூட்டணி கட்சி என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா ஓரளவிற்கு தான் பொறுத்துக் கொள்ள முடியும்.. எங்களுடைய பொறுமைக்கும் எல்லை இருக்கிறது.
முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது கடலூர் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் இது போன்ற சம்பவங்கள் நடந்திருக்கிறது. இது போன்ற சம்பவங்களுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை" என கூறியிருந்தார்.
இந்த நிலையில், இந்த நிலையில் அந்த சம்பவத்திற்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் எந்த தொடர்பும் இல்லை என திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,"இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகேயுள்ள நெல்வாய் கிராமத்தில் நடந்த வன்முறைக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் எந்தவொரு தொடர்புமில்லை. பாமக நிறுவனரும், அதன் தலைவரும் இதனை வைத்து வட மாவட்டங்களில் சமூகப் பதற்றத்தை உருவாக்கிட முயற்சிப்பது அதிர்ச்சியளிக்கிறது. விசிகவுக்கு எதிராக பாமக பரப்பும் வதந்தியை நம்ப வேண்டாமென
பொது மக்களைக் கேட்டுக்கொள்கிறோம்." என கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக நேற்று அறிக்கை விட்டிருந்த பாமக நிறுவனர் ராமதாஸ்," பாட்டாளி மக்கள் கட்சியினர் மீதான இந்தக் கொடியத் தாக்குதலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் சாதிவெறியும், கட்டுப்படுத்தப்படாத கஞ்சாப் புழக்கமும் தான் காரணம் ஆகும். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாதி அடிப்படையில் வன்முறையில் ஈடுபடுவதும், தாக்குதல் நடத்துவதும் இது முதல் முறையல்ல. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நெல்வாய் கிராமத்திற்குள் புகுந்த அவர்கள், அங்கிருந்த மக்களின் சொத்துகளை சூறையாடினர்." என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications