கல்யாணமான 75 நாளில் 4 முறை.. அட்ஜஸ் பண்ணிட்டு போம்மா ரிதன்யா.. கொங்கு மண்டலத்தில் நடக்கும் கொடூரம்
சென்னை: வரதட்சணை கொடுமையால் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மனநல ஆலோசகர் அபிநயா ஜெகதீஸ் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். இந்த சம்பவத்தின் பின் உள்ள மனநல ரீதியான கோணத்தை அவர் இந்த பேட்டியில் அணுகி உள்ளார்.
ரிதன்யா மரணம் தொடர்பாக மனநல ஆலோசகர் அபிநயா ஜெகதீஸ் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தற்கொலை கோழைத்தனம் என்று சொல்கிறோம். இறந்தவர்களை குற்றம் சாட்டுகிறோம். ஆனால் அதை தடுப்பது எப்படி என்று யோசிப்பது இல்லை. ரிதன்யா திருமணம் ஆன 75 நாட்களில் 4 முறை வீட்டிற்கு சென்றுள்ளார். அழுதபடி வீட்டிற்கு சென்றுள்ளார். அவர் தனக்கு யாரும் இல்லை என்பதால் இந்த முடிவிற்கு சென்றுள்ளார். அந்த பாப்பாவிற்கு ஆறுதல் கொடுத்திருந்தால்.. அவரின் வருத்தத்தை புரிந்துகொண்ட இருந்தால் இந்த முடிவை பாப்பா எடுத்திருக்காது.

ஏன் சொந்த குடும்பத்தில் கூட அவரை வழிகாட்டாமல் அட்வைஸ் மட்டுமே பண்ணி இருக்காங்க. நம்முடைய குழந்தை நன்றாக இருக்கிறது என்று நாமே நினைத்துக்கொள்ள கூடாது. அந்த குழந்தையின் மனசு எப்படி இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நான் இதை எல்லாம் கடந்து வந்தவள் தான் என்று ஆறுதல் சொல்ல கூடாது. அது தவறான ஆறுதல். ஒவ்வொருவரின் பிரச்சனை வேறு மாதிரி இருக்கும். பிரச்சனைகளை காது கொடுத்து கேட்க வேண்டும்.
ரிதன்யா மாதிரி சம்பவத்தை தடுக்க.. மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் உடனே சுதாரிக்க வேண்டும். விவாகரத்து என்பதை பெரிய குற்றம் போல பார்க்க கூடாது. 10 கொலை செய்தவர்களை இவர்கள் விட்டுவிடுவார்கள். ஆனால் விவாகரத்து செய்தவர்களை பெரிய தவறு செய்தவர்கள் போல பார்ப்பார்கள். அப்படி பார்க்க கூடாது. முக்கியமாக வரதட்சணை என்பதில் உறுதியான நிலைப்பாடுகளை எடுக்க வேண்டும்.
உங்கள் குழந்தைகளை நம்புங்கள். பாதிக்கப்பட்டவர்களின் குரல்களை கேளுங்கள். இப்படி செய்து இருக்கலாமே.. அப்படி செய்து இருக்கலாமே என்று நினைக்காதீர்கள். கொஞ்சம் அட்ஜஸ் பண்ணி போ என்று சொல்ல கூடாது. ரிதன்யா வழக்கில் அப்படித்தான் பெற்றோர்கள் சொல்லி இருக்கிறார்கள். அப்படி சொல்வது தவறு. இது மாறனும். இதை உடைக்கணும். கொங்கு மண்டலத்தில்தான் முக்கியமாக இது நடக்குது.
இங்கே ஆண்கள் பலரும் தொழில்முனைவோர்கள். இதனால் அவர்களிடம் பணம் உள்ளது. இதனால் பெண்கள் வேலைக்கு செல்ல தேவை இல்லாத சூழல் உள்ளது. இதன் காரணமாக பெண்கள் வீட்டிற்குள் முடங்குகிறார்கள். இது ஆணாதிக்கத்துக்கு காரணமாக மாறிவிடுகிறது. ஆணாதிக்கம் அதிகமாக இருப்பதால் இது போன்ற சம்பவங்கள் அதிகம் நடக்கிறது. இங்கேதான் அதிகம் டவுரி கொடுக்கிறார்கள். நிறைய நகை போடுகிறார்கள்.
இதை எல்லாம் தடுக்க வேண்டும். எங்கேயும் நடக்க முடியாத ஆடம்பர கல்யாணங்கள் இங்கேதான் நடக்கின்றன. அது எல்லாம் மாற வேண்டும்.. பணக்கார குடும்பங்களுக்கு பெண் கொடுக்க வேண்டும் என்று நினைக்காமல்.. நல்ல பையனுக்கு பெண் கொடுக்க வேண்டும் என்று நினைக்க வேண்டும், எத்தனை பெற்றோர் ஸ்டேட்ஸ் குறைவாக உள்ள பையனை ஏற்றுக்கொள்கிறீர்கள்.. அதை மாற்ற வேண்டும் என்று மனநல ஆலோசகர் அபிநயா ஜெகதீஸ் அளித்த பேட்டியில் கூறி உள்ளார்.












Click it and Unblock the Notifications