யூ-டர்ன் போட்ட பஸ்! தூக்கி வீசிய டாரஸ் லாரி! ஸ்ரீபெரும்புதூரில் தொடரும் விபத்துகளுக்கு காரணம் என்ன?
சென்னை: தண்டலம் பகுதியில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் நிறுவன பேருந்து மீது டாரஸ் லாரி மோதிய பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கிய லாரி ஓட்டுநர் ஜேசிபி உதவியுடன் மீட்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில் நெடுஞ்சாலையில் செல்லும் தனியார் கார் நிறுவன ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பஸ், யூ டர்ன் எடுப்பதும், பின்னால் இருந்து வேகமாக வந்த டாரஸ் லாரி கட்டுப்பாட்டை இழந்து பஸ்ஸை இடித்து தள்ளி சாலை தடுப்பிலுள்ள மின்சார கம்பத்தில் கொண்டு போய் தள்ளிவிடுவதுமாக பகீர் காட்சிகள் உள்ளன.

இதுபோன்ற விபத்து சமீபத்தில் அடிக்கடி இங்கு நடக்கிறது. யூடர்ன் எடுக்கும் வாகனங்களை நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் பொருட்டாக மதிப்பதில்லை. வேகமாக வந்து இடித்து தள்ளும் காட்சிகளை அடிக்கடி பார்க்கிறோம்.
வேலூர் முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை பல ஆண்டுகளாக சாலை விரிவாக்கம் மற்றும் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், நெடுஞ்சாலைத்துறை இன்னும் இந்த பணிகளை முடிக்கவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் பெரும்பாலும் சர்வீஸ் சாலைகளையே பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. குண்டும் குழியுமான சாலைகளில் வாகனங்களை மெதுவாக ஓட்ட வேண்டியிருப்பதால், வாகன ஓட்டிகள் எரிச்சலடைந்து பிற பகுதிகளில் வழக்கத்தைவிட வேகமாக ஓட்டுகின்றனர்.இதுவே ஸ்ரீபெரும்புதூர் அருகே அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பேசிய போக்குவரத்து வல்லுநர்கள், "இந்த பகுதி நாட்டின் முக்கிய தொழிற்சாலை மண்டலங்களில் ஒன்றாக இருப்பதால், இங்கு வாகன நெரிசல் அதிகமாக உள்ளது. மேலும், நீண்ட காலமாக நடைபெற்று வரும் சாலைப்பணிகளும் விபத்துக்களுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன. சாலைப்பணிகளை விரைந்து முடித்து, சாலைகளை மேம்படுத்தினால் மட்டுமே விபத்துகளை தடுக்க முடியும்" என தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து பேசிய பொதுமக்கள், "நெடுஞ்சாலைத்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலைப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மேலும், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தண்டலம் அருகே நடைபெற்ற பேருந்து-லாரி மோதல் விபத்து, சாலைப்பணிகள் தாமதம் மற்றும் வாகன நெரிசல் ஆகியவை விபத்துக்களுக்கு முக்கிய காரணங்கள் என்பதை உணர்த்துகிறது. இந்த பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணாவிட்டால், இதுபோன்ற விபத்துகள் தொடர்ந்து நிகழும் அபாயம் உள்ளது.












Click it and Unblock the Notifications