Robo Shankar death: எனக்கெல்லாம் சோறு கூட கிடைக்காது.. தனுஷ் மட்டும் இல்லைனா? மேடையில் உடைந்து பேசிய ரோபோ சங்கர்
சென்னை: மேடை கலைஞராக வாழ்க்கையைத் தொடங்கி சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் நாயகன் வரை உயர்ந்த ரோபோ சங்கர் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார். ரோபோ சங்கரின் மறைவு ரசிகர்களைக் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கும் நிலையில், அவரது காமெடி காட்சிகளை சமூக வலைதளங்களில் நினைவு கூர்ந்து வருகின்றனர் ரசிகர்கள். இந்த நிலையில், தனுஷ் குறித்து ரோபோ சங்கர் பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.
கிராமங்களில் இருந்து புறப்பட்டு வரும் யாரையும் அவ்வளவு சீக்கிரம் சினிமா ஏற்றுக் கொள்ளாது. கடும் போராட்டங்கள், இன்னல்கள், தோல்விகளை சந்தித்த பிறகு அந்த வாய்ப்பு அரிதாக சிலருக்குக் கிடைக்கும். அப்படி மதுரையில் ஒரு கிராமத்திலிருந்து கலை தாகத்தோடு புறப்பட்டு சென்னைக்கு வந்தவர்தான் ரோபோ சங்கர்.
மதுரையில் பிறந்த அவர் மேடை கலைஞராகவே தனது வாழ்வைத் தொடங்கினார். உடல் முழுவதும் சில்வர் பெயிண்டைப் பூசிக்கொண்டு பாடல்களுக்கு ஏற்ற மாதிரி உடலை அசைத்து ரசிகர்களுக்குப் பெரும் வரவேற்பைப் பெற்றவர். மிகச்சிறந்த மிமிக்ரி கலைஞரும் கூட..

நடிகர் ரோபோ சங்கர்
நடிகர்களின் அசைவுகளைத் துல்லியமாக நகலெடுத்து அசத்துவார். அந்தத் திறமை அவருக்குச் சின்னத்திரையில் வாய்ப்பைக் கொடுத்தது. தொடர்ந்து தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சிகளில் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு? அவருக்கு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுத் தந்தது. விஜயகாந்தின் தர்மசக்கரம் படம் அவரது முதல் திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜெயம் ரவியுடன் தீபாவளி உள்ளிட்ட படங்களிலும் நடித்தார்.
தமிழ் சினிமா வாய்ப்பு
ஆனால் சினிமாவில் முழு நேர காமெடியனாக ரோபோ சங்கருக்கு வாய்ப்பைக் கொடுத்தவர் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது. மாரி படத்தில்தான் முழு நேர நகைச்சுவை நடிகராக ரோபோ சங்கர் நடித்திருந்தார். அதற்குப் பிறகுதான் சிம்பு, அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு ரோபோ சங்கருக்குக் கிடைத்தது. இன்று வரை அவரது பல காமெடிகள் மீம் டெம்ப்ளேட்டுகளாக சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது.
ரோபோ சங்கர் கடைசி படம்
எல்லாவற்றையும் விட, அன்னிக்கு காலைல 6 மணி இருக்கும் ரோபோ சங்கரின் காமெடி இன்றும் ரசிகர்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும். அதேபோலவே, 18ஆம் தேதி இரவு ஒன்பது மணிக்கு ரசிகர்களை விழா துயரில் ஆழ்த்திவிட்டுச் சென்றுள்ளார் ரோபோ சங்கர். இந்த நிலையில் வெள்ளித்திரையில் தனக்குச் சம வாய்ப்பு வழங்கி வாழ்வளித்தவர் தனுஷ் என சமீபத்தில்தான் பேசியிருந்தார் ரோபோ சங்கர். ரோபோ சங்கர் ஹீரோவாக அவர் நடித்த தம்பி திரைப்படம் கடந்த மே மாதம் வெளியானது. ஹீரோவாக அதுதான் அவருக்கு முதல் படம். அதே நேரத்தில் கடைசி படமும் அதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
ரோபோ சங்கர் தனுஷ்
அந்த நிகழ்ச்சியில்தான் தனுஷ் உடனான தனது திரையுலக அனுபவங்களை உருக்கமாகப் பகிர்ந்துகொண்டார் ரோபோ சங்கர். நிகழ்ச்சியில் பேசிய அவர்," வெள்ளித்திரைக்குள் நுழைந்தபோது வாய்ப்புகள் குறைந்ததால், "மிமிக்ரி ஆர்டிஸ்ட்" என்று அழைத்து வந்து சில காட்சிகளில் மட்டும் நடித்துக்கொள்ளச் செய்வார்கள். ஆனால் தன்னுடைய கலைக்கு உரிய மதிப்பு கிடைக்கவில்லை. ஒரு கலைஞனுக்கு வெள்ளித்திரையில் இடம் கிடைப்பது மிகவும் முக்கியம். தனுஷ் நடித்த 'மாரி' படத்தில் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், சினிமாவில் இன்று நான் இருக்க முடியாது.
ரோபோ சங்கர் வீடியோ
அந்த படத்தில்தான் நான் எனது தனித்துவத்தை வெளிப்படுத்த முடிந்தது. தனுஷ் சார் எனது வாழ்க்கையில் பெரிய உதவி செய்தவர். அவருடைய உதவியை நான் மறந்துவிட்டால் எனக்கு உணவு கூட கிடைக்காது. நான் அவரின் செல்லப்பிள்ளை என்று சொல்லிக்கொள்வதில் பெருமை படுகிறேன். தனுஷ் தனது வாழ்க்கையின் மிகக்கடினமான தருணங்களில் உறுதுணையாக இருந்தார். குறிப்பாக கொரோனா காலத்தில் தனது குடும்பத்துக்கு அவர் அளித்த நிதி உதவி மறக்க முடியாத ஒன்று. நான் கஷ்டத்தில் இருந்த போது மனதளவிலும், மனிதநேயத்திலும் எனக்கு துணைநின்றவர் நடிகர் தனுஷ் தான். இன்று நான் சந்தோஷமாக இருக்க, அவரும் ஒரு காரணம்" என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications