Robo Shankar: சாவின் விளிம்பு வரை போயிட்டு வந்து இருக்கேன்னு பேசிய ரோபோ சங்கர்.. மீண்டு வந்தவரை விடாத துயரம்
சென்னை: கெட்ட பழக்கத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சாவின் விளிம்பு வரை போயிட்டே வந்தேன் என்றும், தற்போது எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் இருப்பதாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரோபோ சங்கர் பேசியிருந்தார். உடல்நலம் பெற்று மீண்டும் படங்களில் பிசியாக நடித்து வந்த ரோபோ சங்கரின் திடீர் மறைவு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியான நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ரோபோ சங்கர். கடந்த 2007ஆம் ஆண்டு ரவி மோகன் நடிப்பில் வெளியான தீபாவளி படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான ரோபோ சங்கர், காமெடிகளில் கலக்கினார். சின்னத்திரை, வெள்ளித்திரை என படு பிசியாக இருந்த ரோபோ சங்கர், விஜய், அஜித், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார்.

நடிகர் ரோபோ சங்கர் மரணம்
ரோபோ சங்கர் சில மாதங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சைகள் மூலம் மீண்டு வந்த அவர், பழையபடி படங்களில் நடிக்கத் தொடங்கினார். முன்புபோல உடல் நலமும் தேறினார். ஆனால் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக படப்பிடிப்பின் போது மயங்கி விழுந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று இரவு 8.30 மணியளவில் உயிரிழந்தார்.
சாவின் விளிம்பு வரை சென்று வந்தேன்
ரோபோ சங்கரின் மறைவு திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்டுமஸ்தான உடலமைப்பைக் கொண்ட ரோபோ சங்கர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மரணத்தின் விளிம்பு வரை சென்றுவிட்டு வந்ததாக உருக்கமாக பேசியிருந்தார். தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பேசிய ரோபோ சங்கர் கூறியதாவது:-
படுத்த படுக்கையாகி விட்டேன்
"5 மாதம் படுத்த படுக்கையாகி சாவின் விளிம்பிற்கு சென்று விட்டேன். அதற்குக் காரணம் என்னிடமிருந்த சில கெட்ட பழக்கங்கள்தான். அந்த பழக்கத்திற்கு அடிமையாகி விட்டேன். எனவேதான் உங்களுக்கு முன் உதாரணமாக நான் இப்போது இருக்கிறேன். தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு கூட சென்றுவிட்டேன்.
வாழ்க்கையே வெறுத்து, அந்த பழக்கம் இல்லாமல் இருக்கவே முடியல. நடு ராத்திரியில் எழுந்து கிறுக்கனாகத் திரிய ஆரம்பிச்சிட்டேன். அந்த நேரத்தில்தான் நக்கீரன் கோபால் சார், கரெக்டா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மருத்துவர்களின் சரியான ஆலோசனையும், நண்பர்களின் பிரார்த்தனைகளும் சேர்ந்துதான் இன்று இங்கே நிற்கிறேன்.
எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை
இப்போது எனக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை. ஹேப்பியாக இருக்கேன். சந்தோஷமாக இருக்கேன். தினமும் உடற்பயிற்சி செய்கிறேன். ஹெல்தியான உணவு சாப்பிடுகிறேன்." உடல் நல பாதிப்பிலிருந்து மீண்டு வந்த ரோபோ சங்கர், மகள் இந்திரஜாவின் திருமணத்தை ஊரே வியக்கும் அளவிற்கு சிறப்பாக நடத்திக் காட்டினார்.
சமீபத்தில் இந்திரஜாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. பேரனுடன் கொஞ்சி விளையாடுவது என குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்த ரோபோ சங்கர், மீண்டும் திரைப்படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில்தான், மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டு, இன்று உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ் திரையுலகை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications