‘ரூட்டு தல’ சண்டை.. கத்தி கட்டைகளுடன் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்.. போலீசை பார்த்ததும் ஒரே ஓட்டம்!
சென்னை: சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட 'ரூட்டு தல' பிரச்சனையால் மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்ட சம்பவத்தால் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை வள்ளலார் நகரில் இருந்து திருவேற்காடு செல்லும் பேருந்து ஒன்று அரும்பாக்கம் என்எஸ்கே நகர் பேருந்து நிலையத்தில் நின்ற போது பேருந்தில் இருந்த ஒரு பிரிவு மாணவரை மற்றொரு பிரிவினர் தாக்கியுள்ளனர். இதையடுத்து இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கத்தி மற்றும் கட்டையால் மாறி மாறி தாக்கிக் கொண்டுள்ளனர்.

மேலும், மாணவர்கள் கீழே கிடந்த கற்களாலும், மதுபாட்டில்களை கொண்டும் ஒருவர் மீது ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். மாணவர்கள் சண்டை போட்டுக் கொள்வதைப் பார்த்து அப்பகுதியில் நின்ற பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்ற தகவலின் பேரில் அரும்பாக்கம் ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
போலீசார் வருவதை பார்த்ததும், மாணவர்கள் கையில் கத்தியோடும், கட்டைகளோடும் சாலையில் நாலாபுறம் தெறித்து ஓடினர். பேருந்துகளிலும் சிலர் ஏறி தப்பித்தனர். சில மாணவர்கள் சாலையில் செல்லும் ஆட்டோவில் ஏறி தப்பியுள்ளனர். இந்த மோதல் சம்பவத்தில் ஒரு மாணவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அங்கு வந்த போலீசார், 17 மாணவர்களை ரவுண்டு கட்டி பிடித்துள்ளனர். மாணவர்களிடையே விசாரணை நடத்தியதில், 'ரூட்டு தல' பிரச்சனை காரணமாக பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த இரு தரப்பு மாணவர்கள் மோதிக் கொண்டதாக தெரியவந்தது. இதையடுத்து, அரும்பாக்கம் போலீசார் அப்பகுதியில் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே 2019ஆம் ஆண்டு இதே பகுதியில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இடையே 'ரூட்டு தல' பிரச்சனை ஏற்பட்டு, இரு பிரிவினர் மாறி மாறி வெட்டி கொண்டதும் குறிப்பிடத்தக்கது. கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்டும் 'ரூட்டு தல' பிரச்சனையை தடுக்க சென்னை மாநகர காவல்துறை சார்பில் கவுன்சிலிங் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இப்போது மீண்டும் மோதல் வெடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications