பட்டாகத்தியுடன் ரவுடிகள் மிரட்டுறாங்க! சென்னை கமிஷனர் ஆபிசில் குடும்பத்துடன் மெக்கானிக் போராட்டம்
சென்னை: கடைக்கு முன்பாக வந்து பட்டா கத்தியில் கேக் வெட்டும் ரவுடிகள் என்னையும் மிரட்டுகிறார்கள். போலீசில் புகாரளித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை என்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சைதாப்பேட்டையை சேர்ந்த மெக்கானிக் குடும்பத்துடன் வந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
ரவுடிகள் தனது கடைக்கு முன்பாக வந்து பட்டாகத்தியால் கேக் வெட்டுவதோடு, அவர்கள் மீது போலீஸ் ஸ்டேஷனில் நான் தான் புகார் கொடுத்தேன் என்பதால் எனது கடையையும் அடித்து சேதப்படுத்திவிட்டதாக கூறி சென்னை கமிஷனர் அலுவலகம் முன்பு சரவணன் என்பவர் தனது குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் இன்று அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சரவணன் பேட்டியின் போது கூறியதாவது:-

எனது பெயர் சரவணன். சைதாப்பேட்டை சாஸ்திரி முதல் தெருவில் நான் மெக்கானிக் கடை வைத்து இருக்கிறேன். எனது கடை இருக்கும் இடத்தில் ரவுடிகள் தொடர்ந்து பட்டாகத்தியால் கேக் வெட்டுகிறார்கள். அந்த இடத்தில் 3-வது கடையாக நான் வைத்திருக்கிறேன். கேக் வெட்டும் ரவுடிகள் என்னை வந்து மிரட்டுகிறார்கள். நீ ஏன் கடை திறந்து வைத்திருக்கிறாய்.. நீதான் வீடியோ எடுத்து போடுகிறாயா.. இதெல்லாம் உன் வேலைதானா.. என மிரட்டுகிறார்கள்...
இது சம்பந்தமாக இன்ஸ்பெக்டரிடமும் கமிஷனரிடமும் நான் எத்தனையோ முறை புகார் கொடுத்துவிட்டேன். ஆனால் நடவடிக்கையே எடுக்கல. இதற்கு அப்புறம் நான் என்ன செய்வது என்று தெரியவில்லை. நீதிமன்றத்திற்கு போய் வழக்கு தொடர்ந்தோம். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுங்க என்று நீதிமன்றம் உத்தரவிட்டும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கல.. நாங்கள் யார் மீது புகார் கொடுத்தோமோ அதே நபர்கள் மீண்டும் வந்து மிரட்டுகிறார்கள்.

நான் மறுபடியும் புகார் கொடுத்த போதும் என்னை அழைத்து விசாரணை கூட செய்யவில்லை. அதனால் என் உயிருக்கு ஆபத்து உள்ளது. குடும்பத்திற்கும் ஆபத்து உள்ளது. என் வாழ்வாதாரமே போச்சு.. இதுவரைக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை. தொடர்ந்து இரவு 10 மணிக்கு மேல் பொது இடத்தில் பட்டாகத்தியால் கேக் வெட்டிவிட்டு கும்பல் கும்பலாக நின்று அநாகரிக செயலில் ஈடுபடுகிறார்கள். எங்கள் மீது போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்கள் நீதான் புகார் கொடுத்து இருக்கிறாய் என எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்.
நான் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள் என சொல்லும் போதே நடவடிக்கை எடுத்து இருந்தால் ரவுடிகள் என்னை தாக்கியிருக்க மாட்டார்கள். நான் எல்லா ஆதராமும் கொடுத்துவிட்டேன். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனக்கு எந்த ஆபத்து நேர்ந்தாலும் ரவுடிகள் மேல நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று போராட்டத்தில் ஈடுபட்ட மெக்கானிக் கூறினார். சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தனது குடும்பத்தினருடன் வந்து ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒருவர் போராட்டம் நடத்தியதால் இன்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications