மனைவியோடு பெட்ரூமில் இருந்த ஜெயில் நண்பன்.. கண்டித்த ரவுடிக்கு ஏற்பட்ட கொடூர முடிவு! ஷாக் சம்பவம்!
சென்னை: சிறையில் நண்பனான சக ரௌடி, தனது மனைவியோடு தகாத உறவில் இருந்ததைக் கண்டித்ததால், நண்பனே ரௌடியை தீர்த்துக்கட்டிய சம்பவம் சென்னை, திருவள்ளூரை அதிர வைத்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள சின்னக்காவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் லக்ஷ்மணன். சரித்திர பதிவேடு குற்றவாளியான லக்ஷ்மணன் மீது திருட்டு, வழிப்பறி, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ரௌடி லக்ஷ்மணனுக்கும், மீஞ்சூரை அடுத்த தோட்டக்காடு கிராமத்தைச் சேர்ந்த பிரபல ரவுடியான விஷ்ணு என்பவருக்கும் சென்னை புழல் மத்திய சிறையில் இருந்தபோது பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையேயான நட்பு இருவரும் சிறையில் இருந்து வெளியில் வந்த பின்னரும் தொடர்ந்துள்ளது.
விஷ்ணு, அடிக்கடி லக்ஷ்மணனின் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். லக்ஷ்மணன் இல்லாத நேரங்களிலும் விஷ்ணு அவர் வீட்டுக்கு வந்துள்ளார். லட்சுமணனின் மனைவியுடன் விஷ்ணுவிற்கு திருமணத்தை மீறிய தகாத உறவு ஏற்பட்டுள்ளது.
இதனை அறிந்த லக்ஷ்மணன், பலமுறை இருவரையும் கண்டித்து உள்ளார். எனினும், இந்த தவறான உறவு தொடர்ந்துள்ளது. இந்நிலையில் விஷ்ணு, லட்சுமணனை தனது சொந்த ஊரான தோட்டக்காடு அழைத்துச் சென்று மது வாங்கி கொடுத்துள்ளார். நன்றாக குடித்து போதையில் இருந்த லக்ஷ்மணனை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.
லக்ஷ்மணனின் மனைவி உடனான உறவுக்கு இடையூறாக இருந்த அவரை, தனது நண்பர்களுடன் சேர்ந்து விஷ்ணு சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று தலைமறைவாகி உள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீஞ்சூர் காவல்துறையினர் லக்ஷ்மணனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருக்கும் விஷ்ணு உள்ளிட்ட 5 பேரை தேடி வருகின்றனர். மனைவி உடனான திருமணத்தை மீறிய உறவை தட்டிக் கேட்ட ரவுடியை நண்பனே வெட்டி கொலை செய்த சம்பவம் பொன்னேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications