ஓயாத சர்ச்சை: ரூ1.87 கோடி வரி பாக்கி... இளையராஜாவுக்கு ஜி.எஸ்.டி. ஆணையரகம் இறுதி நோட்டீஸ்?
சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா ரூ1.87 கோடி வரி பாக்கி கட்டுவது தொடர்பாக ஜி.எஸ்.டி. ஆணையரகம் இறுதி நோட்டீஸ் ஒன்றை அனுப்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மத்திய அரசின் ஜி.எஸ்.டி. புலனாய்வு இயக்குநரகமானது இளையராஜாவுக்கு இதுவரை 2 சம்மன்களை அனுப்பி உள்ளது. கடந்த பிப்ரவரி 28-ந் தேதியன்று முதல் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. அதில் சேவை வரியை சரியாக செலுத்தாத காரணத்தால் மார்ச் 10-ந் தேதி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

2 சம்மன்கள்
இதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் 21-ந் தேதி மற்றொரு சம்மன் இளையராஜாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முன்னர் தெரிவித்த காரணங்களை சுட்டிக்காட்டி மீண்டும் 28-ந் தேதியன்று இயக்குநரகத்தில் ஆஜராக ஜி.எஸ்.டி. ஆணையரகம் சம்மன் அனுப்பியது.ஏற்கனவே அனுப்பப்பட்ட 2 சம்மன்களுக்கும் இளையராஜா நேரில் ஆஜராகி விளக்கம் தரவில்லை.

3-வது சம்மன்
இதையடுத்து தற்போது 3-வது சம்மன் ஒன்றையும் ஜி.எஸ்.டி. இயக்குநரகம் அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது. திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றிடம் வரியுடன் சேர்த்து கட்டணம் பெற்றார் இளையராஜா; ஆனால் அந்த வரியை ஜி.எஸ்.டி. ஆணையரகத்திடம் செலுத்தவில்லை என்பதுதான் புகார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஜி.எஸ்.டி. அதிகாரிகள், விசார்ணைக்கு இளையராஜா ஆஜரானால் உரிய வரி செலுத்துவது தொடர்பாக ஆலோசனை வழங்கப்படும். அப்படி வரி செலுத்த முடியாது எனில் சம்மனுக்கு எதிரான தடையாணையை இளையராஜா தரப்பு பெற்றுக் கொள்ளலாம் என்கின்றனர்.

மோடி-அம்பேத்கர் ஒப்பீடு
இந்த ஜி.எஸ்.டி. இயக்குநரக சம்மனை முன்வைத்துதான் பிரதமர் மோடியை இளையராஜா புகழ்ந்து பேசியதாக சர்ச்சை வெடித்திருந்தது. அம்பேத்கர் அன்ட் மோடி என்ற தலைப்பில் புளூகிராஃப்ட் பதிப்பகம் ஒரு நூல் வெளியிட்டது. இந்த நூலுக்கு இளையராஜா முன்னுரை எழுதி இருந்தார். அதில், பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியாவின் வளர்ச்சிப் பயணமும், அம்பேத்கரின் லட்சியங்களும் ஒன்றை ஒன்று சந்திக்கும் புள்ளியை இந்த நூல் ஆராய்கிறது என தொடங்கி பல்வேறு அம்சங்களில் அம்பேத்கரையும் மோடியையும் இளையராஜா ஒப்பிட்டிருந்தார். அத்துடன் முத்தலாக் தடை போன்ற மோடியின் நடவடிக்கையை கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார் என்றும் இளையராஜா குறிப்பிட்டிருந்தார்.

கடும் விமர்சனங்கள்
இளையராஜாவின் இந்த ஒப்பீடு மிக கடுமையான சர்ச்சையாக வெடித்தது. மோடி அம்பேத்கருக்கு நிகரானவர் என்று சொல்வதெல்லாம் அம்பேத்கருக்கு அசிங்கம்.அம்பேத்கர் எங்காவது பொய் சொல்லியிருக்காரா, பொய்க்கு துணை போயிருக்காரா? என்கிற கேள்விகளையும் சமூக வலைதளங்களில் பலர் எழுப்பி இருந்தனர். இளையராஜாவின் இந்த திடீர் மோடி புகழாரத்துக்கு காரணமே ஜிஎஸ்டி சம்மன் விவகாரம் எனவும் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications