மசூதி, தர்கா, தேவாலயங்களை புனரமைக்க ரூ.10 கோடி! பட்ஜெட்டில் அறிவித்த தங்கம் தென்னரசு
சென்னை: பள்ளிவாசல், தர்கா, தேவாலயங்களை புனரமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என தமிழ்நாடு பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்து உள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் அறிக்கையை வாசித்த அவர், "சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று அவற்றுக்கு உரிய சான்றிதழ்களை நிரந்தரமாக வழங்கும் ஆணையை வெளியிடப்படும். இந்த முடிவு சிறுபான்மை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. வழிபாட்டுத் தலங்களுக்கு முறையான அனுமதி பெறுவது, வழிபாட்டுத் தலங்களில் புனரமைப்பை மேற்கொள்வதில் உள்ள இடர்பாடுகளை களைந்திட விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.

பள்ளிவாசல்கள், தர்காக்களை பழுதுபார்ப்பதற்கும், சீரமைப்பதற்கும் ரூ.10 கோடி மானியம் வழங்கப்படும். கன்னியாகுமரி, தக்கலை, வேலூர், தென்காசி பொட்டல்புதூரில் உள்ள தர்காக்கள் இந்த ஆண்டு சீரமைக்கப்படும். தேவாலயங்களை பழுதுபார்ப்பதற்கும் சீரமைப்பதற்கும் இந்த ஆண்டு ரூ.10 கோடி மானியம் வழங்கப்படும். சென்னை சூளைமேடு, கடலூர் விருத்தாசலம், சிவகங்கையின் இடைகாட்டூரில் உள்ள தேவாலயங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்.
இந்த அரசு பொறுப்பேற்ற நாள் முதல் கடந்த 3 ஆண்டுகளில் 1290 திருக்கோயில்களில் திருப்பணிகள் நிறைவுபெற்று குடமுழுக்குகள் நடத்தப்பட்டன. நாள் முழுவதும் அண்ணதானம் வழங்கும் திட்டம் பழனி, திருவண்ணாமலை, திருவரங்கம், சமயபுரம் உள்ளிட்ட 11 திருக்கோயில்களில் நடைபெற்றது. கோயில் சொத்துக்களையும் உடைமைகளையும் பாதுகாப்பதற்கு இந்த அரசு எடுத்த முயற்சிகளின் காரணமாக 6,071 ஏக்கர் நிலமும், 25.34 லட்சம் சதுர அடி மனைகளும், 5.04 லட்சம் சதுர அடி கட்டிடங்களும் கோயில்களின் வசமாக்கப்பட்டு உள்ளன, இவற்றின் மொத்த மதிப்பு ரூ.5,718 கோடியாகும்.
மேலும் 140 திருக்கோயில்களில் உள்ள குளங்களை சீரமைக்க 84 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்து சமய அறநிலையத்துறை பதிப்பகத்தின் மூலமாக 800 க்கும் மேற்பட்ட அரிய நூல்கள் மறுபதிப்பு செய்து வெளியிடப்பட்டன. செங்கல்பட்டு மாவட்டம் திருநீர்மலை மற்றும் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அமைந்து உள்ள திருக்கோயில்களுக்கு கம்பி வட ஊர்தி வசதி 26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும். ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்களில் திருப்பணிகள் செய்திட இந்த ஆண்டு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்." என்றார்.












Click it and Unblock the Notifications