சிறைத்துறையில் ரூ.100 கோடி ஊழல்...லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு
கடந்த அதிமுக ஆட்சியின்போது மதுரை மத்திய சிறையில் ரூ.100 கோடி அளவில் ஊழல் நடைபெற்றதாக கூறி லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், சிறைக்கைதிகள் உரிமை மைய இயக்குனருமான பி.புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தொடர்ந்துள்ள பொதுநல வழக்கில், "மதுரை மத்திய சிறையில் சிறைக்கைதிகளால் மருத்துவ பொருட்கள், ஸ்டேஷ்னரி பொருட்கள் தயாரிக்கப்பட்டு அவை அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், நீதிமன்றங்களுக்கு அனுப்பியதாக போலி கணக்கு தயாரித்து ஊழல் செய்துள்ளனர்.

கடந்த 2016 முதல் 2021 மார்ச் மாதம்வரை நடைபெற்ற இந்த ஊழலில் சுமார் 100 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார். தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இதற்கான ஆதாரங்கள் பெறப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அவரது மனுவில் பொருட்கள் அதிகமாக உற்பத்தி செய்த தாகவும், சிறைக்கைதிகளுக்கு சம்பளம் கொடுக்கப்பட்ட தாக போலி கணக்கு காண்பிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். குறைந்த அளவே உற்பத்தி செய்து அதிக உற்பத்தி செய்தது போல் கணக்கு காண்பித்துள்ளதாகவும், இதில் அப்போதைய சிறைத்துறை கண்காணிப்பாளர்,மற்றும் டிஐஜிகளுக்கு தொடர்பு உள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.
இந்த ஊழல் தொடர்பாக உள்துறைச்செயலாளர், சிறைத்துறை டிஜிபிக்கு புகார் அனுப்பி எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். எனவே இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். பரபரப்பான இந்த விவகாரம் கூடிய விரைவில் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.












Click it and Unblock the Notifications