அதிர்ந்த சென்னை.. ரூ.280 கோடி போதைப்பொருளுடன் சிக்கிய 2 பேர்.. ‛மெத்தம்பெட்டமைனின்’ ஷாக் பின்னணி
சென்னை: சென்னையில் ரூ.280 கோடி மதிப்பிலான ‛மெத்தம்பெட்டமைன்’ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 பேரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
தமிழ்நாட்டுக்கு இலங்கையில் இருந்து கடல் வழியாக போதைப்பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. இப்படி போதைப்பொருள் கடத்துவதை தடுக்க போலீசார் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக கடல் பகுதியில் கடலோர காவல்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருப்பினும் கூட கடத்தல் கும்பல் கடல் வழியாக தமிழகத்துக்கு போதைப்பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்கின்றனர். இவர்களை போலீசார் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். அதேபோல் தமிழ்நாட்டில் இருந்தும் இலங்கைக்கும் போதைப்பொருள் கடத்தும் சம்பவங்கள் நடந்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் சென்னையில் ரூ.280 கோடி மதிப்பிலான போதைப்பொருளுடன் 2 பேர் சிக்கி உள்ளனர். அதாவது சென்னையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவர் தங்கி இருப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் இலங்கையை சேர்ந்த உதயக்குமார் என்பவரிடம் இருந்து 2 கிலோ மெத்தம்பெட்டமைன் எனும் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.
அதோடு உதயக்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது அவர் போதைப்பொருளை பெரம்பூரில் இருந்து அக்பர் அலி என்பவரிடம் இருந்து வாங்கி வந்ததாக தெரிவித்தார். இதையடுத்து பெரம்பூர் சென்ற போலீசார் அங்கு இருந்த அக்பர் அலியை கைது செய்தனர். அவரது வீட்டில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது 54 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான 2 பேரிடம் இருந்து மொத்தம் 56 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் சிக்கியது. இதன் மதிப்பு என்பது ரூ.280 கோடியாகும். இவர்கள் இலங்கைக்கு போதைப்பொருளை கடத்தி செல்ல முயன்ற நிலையில் சென்னை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் சிக்கியதும் தெரியவந்துள்ளது. இவர்களின் பின்னணி விஷயங்கள் குறித்து தற்போது போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த ஆண்டு மட்டும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் இதுவரை சுமார் 60 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மெத்தம்பெட்டமைன் என்பது மூளைக்கு தூண்டி உற்சாகமான மனநிலையை கொடுக்கும் என கூறப்படுகிறது. அதேவேளையில் மத்திய நரம்பு மண்டலத்தை பாதிக்கும் ஒரு சக்திவாய்ந்த போதைப்பொருளாகும். இது பசியின்மையை ஏற்படுத்தும் திறன் கொண்டது. வெள்ளை நிறத்தில் மணமற்றதாக இருக்கும் மெத்தம்பெட்டமைன் தண்ணீர், ஆல்கஹாலில் எளிதில் கரையும். இதனால் பல நாடுகளில் இது போதைப்பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications