சிக்கும் நயினார் நாகேந்திரன்? ரூ.4 கோடி வழக்கில் வாயை விட்ட உறவினர் உள்பட 2 பேரிடம் பரபர விசாரணை
சென்னை: சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட வழக்கில் இன்று ஆஜராக கோரி பாஜக எம்எல்ஏவும், நெல்லை லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளருமான நயினார் நாகேந்திரன் குறித்து வாயை விட்ட உறவினர் உள்பட 2 பேரிடம் இன்று சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணைை தொடர்ந்து நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளது.
திருநெல்வேலி பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன். இவர் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் பாஜக வேட்பாளராக களத்தில் உள்ளார். இந்த தொகுதிக்கு கடந்த 19ம் தேதி தேர்தல் நடந்து முடிந்தது. இதற்கிடையே தான் கடந்த 6ம் தேதி சென்னையில் இருந்து நெல்லைக்கு புறப்பட்ட ரயிலில் பறக்கும் படையினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.

இந்த சோதனை என்பது தாம்பரம் ரயில் நிலையத்தில் வைத்து நடந்தது. அப்போது ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பபட்ட ரூ.4 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சதீஷ், சதீஷின் நண்பர் பெருமாள் மற்றும் நவீன் ஆகியோரை பறக்கும் படையினர் கைது செய்தனர்.
இவர்கள் 3 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ரூ.4 கோடி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோர் தான் பணத்தை தந்துவிட்டதாகவும் கூறியுள்ளனர். இதுதொடர்பாக முருகன், ஜெய்சங்கர், ஆசைத்தம்பி ஆகியோரை அழைத்து தாம்பரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது முருகன் போலீசாரிடம், ‛‛நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் என்னை தொடர்பு கொண்டு பேசினார். அவர் தான் பணத்தை அனுப்பி வைக்க கூறினார்'' என்று போட்டு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தாம்பரம் போலீசார் நயினார் நாகேந்திரன் மற்றும் அவரது உதவியாளர் மணிகண்டனுக்கு சம்மன் வழங்கினர். அதில் மே 2ம் தேதி தாம்பரம் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே தான் தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் பரிந்துரையை ஏற்று, வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் மாற்றினார். கடந்த 26ம் தேதி மாற்றி உத்தரவிட்டார். ஆவணங்கள் சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன. சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
மேலும் தாம்பரம் போலீஸார் அளித்த ஆவணங்களின் அடிப்படையில் 4 பிரிவுகளில் புதிதாக வழக்கு பதிவு செய்தார். இந்நிலையில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் மற்றும் ஆசைத்தம்பி ஆகியோருக்கு போலீசார் சம்மன் அனுப்பினர்.
இவர்கள் 2 பேரும் இன்று காலை 11 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மனில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இருவரும் இன்று விசாரணைக்கு ஆஜராகினர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். இந்த விசாரணை தொடர்ந்து வருகிறது.
இந்த விசாரணையின்போது முக்கிய விஷயங்களை போலீசார் வாக்குமூலமாக பெற உள்ளனர். அதன்பிறகு நயினார் நாகேந்திரனுக்கும் சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி விசாரிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications