இலங்கையில் ரூ.500 கோடி மோசடி.. கடலில் தமிழ்நாட்டுக்கு தப்பிய தம்பதி! நாடு கடத்த முதல்வருக்கு கடிதம்
சென்னை: இலங்கையில் பொதுமக்களிடம் சுமார் ரூ.500 கோடி மதிப்பில் மோசடி செய்துவிட்டு தமிழ்நாட்டுக்கு தப்பி வந்த தம்பதியின் வழக்கை ரத்து செய்து இலங்கைக்கு அனுப்ப வேண்டி முதலமைச்சருக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாநில துணை பொதுச்செயலாளர் முஹம்மது ஷிப்லி கடிதம் எழுதி இருக்கிறார்.
இலங்கையில் பிரிவெல்த் குளோபல் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்த முஹம்மது ஷிஹாப் மற்றும் அவரது மனைவி ஃபாத்திமா பர்ஸானா ஆகியோர் மக்களிடம் ரூ.500 கோடி மதிப்பில் வசூலித்து மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு இருவரும் கடல் வழியாக இலங்கையில் இருந்து தப்பி நாகை மாவட்டம் கோடியக்கரைக்கு வந்துள்ளனர். அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து இருக்கின்றனர்.

பாதிக்கப்பட்டோர் கோரிக்கை
இதனால் பாதிக்கப்பட்ட சுமார் 1,400 குடும்பங்களை சேர்ந்தவர்கள் ப்ரிவெல்த் குளோபல் நிறுவனத்தால் பாதிக்கப்பட்டோர் சங்கம் என்ற அமைப்பை நிறுவி நியாயத்துக்காக போராடி வருகிறார்கள். இவர்கள், தமிழ்நாட்டில் உள்ள இந்த மோசடி தம்பதியை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

முதலமைச்சருக்கு கடிதம்
இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாநில துணை பொதுச்செயலாளரான முஹம்மது ஷிப்லி கடிதம் எழுதி இருக்கிறார். அதில், "இலங்கையை சேர்ந்த முஹம்மது ஷிஹாப் மற்றும் அவரது மனைவி ஃபாத்திமா பர்ஸானா ஆகியோர் இலங்கையில் பிரிவெல்த் குளோபல் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி, இலங்கை மக்களின் பணம் இந்திய ரூபாய் மதிப்பு சுமார் 500 கோடி மோசடி செய்துவிட்டு, கடந்த 6.11.20 அன்று சட்ட விரோதமாக கள்ளத்தோணி மூலம் தப்பித்து தமிழகம் வந்தனர்.

நாடு கடத்த கோரிக்கை
தமிழக போலீஸார் அவர்களைக் கைது செய்து வழக்குப்பதிவு(FIR NO: VDM PS CRNO 1210/20) செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் பிரிவெல்த் குளோபல் பாதிக்கப்பட்டோர் அமைப்பின் பிரதிநிதிகள் கடந்த 19.11.20 அன்று என்னை தொடர்பு கொண்டு பணம் மோசடி செய்துவிட்டு சட்டவிரோதமாக தமிழகம் வந்துள்ள இலங்கை தம்பதியினரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப உதவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

இந்திய தவ்ஹீத் ஜமாத் கடிதம்
இந்தியாவிலிருந்து வேறு எங்கும் தப்பித்துவிடாமல் இருக்க கடந்த 20.11.20 அன்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பில் இலங்கை துணை தூதரகம் மற்றும் FRRO, சட்டம் ஒழுங்கு DGP, சிறைத்துறை DGP உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதி இருந்தேன். காலத்தாமதத்தை தவிர்த்து உடனடியாக அவர்களை இலங்கைக்கு அனுப்ப கடந்த 30.08.21 அன்று தமிழக முதல்வரின் தனிப்பிரிவிற்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கடிதமும் அனுப்பப்பட்டது.

இலங்கை, தமிழக அரசிடம் கோரிக்கை
இந்த வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிந்து பின்பும்கூட அந்த மோசடி தம்பதியினரை அனுப்புவதில் காலதாமதம் ஏற்படுவதால் பிரிவெல்த் குளோபல் பாதிக்கப்பட்டோர் அமைப்பின் பிரதிநிதிகள் சில தினங்களுக்கு முன்பு இலங்கையில் செய்தியாளர் சந்திப்பை நடத்தி மோசடி தம்பதியினரை உடனடியாக இலங்கைக்கு அனுப்பி வைக்கும்படி இலங்கை அரசுக்கும், தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்தனர்.

சந்தேகம்
இந்த மோசடி தம்பதியினருக்கு எதிராக இலங்கையில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இன்டர்போல் ரெட் அலர்ட் வழங்கியுள்ளது. இதுபோன்ற வழக்குகளில் ஆறுமாத காலத்திற்குள் அனைத்து விசாரணைகளும் முடிந்து அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள். இந்த வழக்கில் மட்டும் ஏன் செயற்கையாக காலதாமதம் ஏற்படுத்தப்படுகிறது என்ற சந்தேகம் வலுக்க தொடங்கி உள்ளது.

இண்டெர்போல் ரெட் அலர்ட்
இந்த மோசடி தம்பதியின் மேல் பல்வேறு வழக்குகள் இலங்கையில் நிலுவையில் உள்ளதாலும், இன்டர்போல் ரெட்அலர்ட் வழங்கி இருப்பதாலும், தமிழக முதல்வர் இவர்கள் மேல் உள்ள வழக்கை ரத்து செய்து உடனடியாக இலங்கைக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்." என்று கேட்டுக்கொண்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications