பைபர் ஆப்டிக் கேபிள் வழங்கியதில் முறைகேடு.. ஆர் எஸ் பாரதி வழக்கு.. ஹைகோர்ட் நோட்டீஸ்
சென்னை: தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 524 கிராமங்களில் பைபர் ஆப்டிக் கேபிள் அமைக்க தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு குறித்து வழக்கு பதிய கோரி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி தொடர்ந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்த மனுவில் இந்த முறைகேடு தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய அரசின் பாரத் நெட் திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களுக்கும் இன்டர்நெட் இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1950 கோடி ரூபாய் மதிப்பில் இத்திட்டத்திற்கு டெண்டர் கோரப்பட்டது.
இந்த டெண்டரில் கலந்து கொண்ட பெரும்பாலான நிறுவனங்களை வைத்து விட்டு, குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்களுக்கு மட்டும் டெண்டர் வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தும்படி உத்தரவிட வேண்டுமென மனுவில் கூறியுள்ளார்.
கொரோனா அச்சம் பரவத் தொடங்கிய டிசம்பர் மாதத்தில் அதில் கவனம் செலுத்தாமல் குறிப்பிட்ட இரு நிறுவனங்களை தேர்வு செய்யும் நோக்குடன், விதிகளை மாற்றம் செய்வதில் அரசு கவனம் செலுத்தியதாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. முதல்வர் பழனிசாமி மற்றும் வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் ஆகியோரின் விருபத்திற்கு இணங்க டெண்டர் ஒதுக்கும்படி தகவல் தொழில்நுட்ப துறை செயலாளராக இருந்த சந்தோஷ்பாபு மற்றும் டான்ஃபினெட் நிர்வாக இயக்குனர் எம்.எஸ்.சண்முகம் ஆகியோருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு இன்று நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது இந்த மனு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் வியாழக்கிழமை அன்று ஒத்திவைத்தார்












Click it and Unblock the Notifications