காக்கா கூட்டம்.. ரஜினி சொன்ன வார்த்தையை கையில் எடுத்த திமுக.. விஜய்யை அட்டாக் செய்த ஆர்எஸ் பாரதி!
சென்னை: திமுகவுக்கு கூடுவது கொள்கைக்கான கூட்டம், மற்றவர்களுக்கு வருவது காக்கா கூட்டம் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் விஜய் பரப்புரை பகுதியில் நாங்கள் வேண்டுமென்றே மின்சாரம் நிறுத்துவதாக சொல்வது பொய்யான குற்றச்சாட்டு என்றும் விளக்கம் கொடுத்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் 2ஆம் கட்டமாக நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். சென்னையில் இருந்து காலை 9.30 மணியளவில் தனி விமானத்தில் திருச்சி வந்த அவர், நாகைக்கு தனது காரில் பயணித்தார். இதன்பின் பிரச்சார வாகனத்தில் ஏறிய விஜய்க்கு மக்கள் மிகப்பெரிய வரவேற்பை அளித்து வருகின்றனர்.

சாலை முழுவதும் பொதுமக்கள் நின்று வரவேற்பு அளிக்க, அவர் புத்தூர் ரவுண்டானா பகுதிக்கு வருவதற்கு சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாகியது. ஆனால் விஜய்யை காண்பதற்காக அவரது தொண்டர்கள், ரசிகர்கள் பலரும் புத்தூர் ரவுண்டானா பகுதியில் குவியத் தொடங்கி இருக்கின்றனர். அதிக கூட்டம் காரணமாக சிலர் மயங்கிய சம்பவமும் நடந்திருக்கிறது.
இதனிடையே விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள புத்தூர் ரவுண்டானா பகுதியில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு திமுக தான் காரணம் என்று சில விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் தவெகவின் நாகை மாவட்டச் செயலாளர் சுகுமாரின் கோரிக்கையின் பெயரில் தான் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஆனாலும் தவெக தொண்டர்கள் சோசியல் மீடியாவில் திமுகவை சாடி வருகின்றனர். இந்த நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்களுடையது கொள்கைக்கான கூட்டம்.. மற்றவர்களுக்கு வருவது காக்கா கூட்டம். விஜய் பிரச்சாரம் செய்யும் பகுதியில் நாங்கள் வேண்டுமென்றே மின்சாரம் நிறுத்துவதாக சொல்வது பொய்யான குற்றச்சாட்டு என்று தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.பாரதி காக்கா கூட்டம் என்று தவெக தொண்டர்கள் கூட்டத்தை விமர்சித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் காக்கா, கழுகு கதையை ரஜினிகாந்த் கூறி, விஜய்யை விமர்சித்திருந்தார். இதன்பின் ரஜினிகாந்த் மற்றும் விஜய் ரசிகர்களிடையே மிகப்பெரிய மோதல் சோசியல் மீடியாவில் ஏற்பட்டது.
இதன்பின் ரஜினிகாந்த் அடுத்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், காக்கா என்று யாரையும் சொல்லவில்லை. விஜய்யை அப்படி கூறியதாக ஊடகங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளன என்று விளக்கம் அளித்திருந்தார். தற்போது ரஜினிகாந்த் பயன்படுத்திய காக்கா வார்த்தையை வைத்தே ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார். ஏற்கனவே தவெகவினரை சீமான் அணில் என்று கிண்டல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications