தமிழ்த் தாய் வாழ்த்துப் புறக்கணிப்பில் கைகோர்த்து நிற்கும் ஆர்எஸ்எஸ் ஆர்.என்.ரவி, நாம் தமிழர் சீமான்!
சென்னை: தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலைப் புறக்கணிப்பதில் தமிழ்நாடு ஆளுநரான ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் ஆர்.என்.ரவியும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் அதிதீவிரமான முனைப்புடன் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். சென்னை புத்தகக் கண்காட்சியில் தமிழ்த் தாய் வாழ்த்தை சீமான் புறக்கணித்த நிலையில் தமிழ்நாடு சட்டசபையில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பும் செய்திருக்கிறார்.
தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அரசு அதிகாரியாகப் பணியாற்றி ஆளுநராக நியமிக்கப்பட்டவர். ஆனாலும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சித்தாந்தங்களை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இடைவிடாமல் பரப்புகிறவர்; சனாதனக் கோட்பாட்டை உயர்த்திப் பிடிப்பவர்; திராவிடம் என்ற கருத்தியலை முற்றாக நிராகரிக்கக் கூடியவர். திராவிட சித்தாந்தத்தை பிரிவினைவாத சித்தாந்தம் என முத்திரை குத்தக் கூடியவராகத்தான் இருந்து வருகிறார்.

தமிழ்நாட்டின் ஆளுநராக பதவியேற்ற நாள் முதல், தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசுடன் தொடர் மோதல் போக்கைக் கடைபிடித்து வருகிறார். தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் உரையில் கூட பெரியார், அம்பேத்கர், அண்ணா, கருணாநிதி பெயரை உச்சரிக்க மறுக்கிறார்; திராவிட மாடல் என்ற சொல்லை ஒவ்வாமையாகக் கருதுகிறார்.
பொதுவாக மாநில ஆளுநர்கள், மாநில அரசின் - அமைச்சரவையின் கீழ் கட்டுப்பட்டவர்கள் என்பதற்கு அப்பால் தாமே மாநிலத்தின் தலைமை நிர்வாகியாக நடைமுறையில் செயல்பட நினைக்கிறார் ; இதனால்தான் 2023, 2024-ம் ஆண்டு சட்டசபை கூட்டங்களில் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலுக்குப் பதில் தேசிய கீதம்தான் இசைக்கப்பட வேண்டும் என பிடிவாதம் காட்டி வெளிநடப்பு செய்தார். இந்த ஆண்டும் அதே வெளிநடப்பு பாணியைப் பின்பற்றி இருக்கிறார். தமிழ்நாட்டின் பன்னெடுங்கால மரபை உடைத்து தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை புறக்கணிப்பதில் அவ்வளவு தீவிரம் காட்டுகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
இன்னொரு பக்கம், பாஜகவின் மதவாத சித்தாந்தத்தை எதிர்க்கிறோம்; தமிழ்த் தேசிய அரசியலைப் பேசுகிறோம் என கூறிக் கொள்ளும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மென்மை முகமாகவே பாஜகவின் மறுபதிப்பாகவே திராவிட எதிர்ப்புக் கொள்கைகளை தீவிரமாக முன்னெடுக்கிறார். கழகம் இல்லாத தமிழ்நாடு என முன்னர் தமிழ்நாடு பாஜக தோற்றுப் போன யுக்தியை சீமான் இடைவிடாமல் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறார். இதன் ஒரு பகுதியாக திராவிட நல் திருநாடு என இடம் பெறும் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை கடுமையாக எதிர்க்கிறார்; சீமானின் நிகழ்ச்சிகளில் திட்டமிட்டே தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் புறக்கணிக்கப்பட்டு புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் பாடப்பட்டு வருகிறது. சென்னையில் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியிலும் கூட சீமான் பங்கேற்ற நிகழ்ச்சியில் திட்டமிட்டே தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் இசைக்கப்பட்டது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.
தமிழ்நாடு சட்டசபையில் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை அவமதித்த ஆளுநர் ரவிக்கு எப்படி கண்டனங்களும் எதிர்ப்புகளும் குவிந்து கொண்டிருக்கிறதோ அதேபோல, புத்தகக் கண்காட்சி நடத்துகிற பபாசி அமைப்பும் பதிப்பகங்களும் சீமானின் இந்த தமிழ்த் தாய் வாழ்த்துப் புறக்கணிப்பை வன்மையாகக் கண்டித்திருப்பதுடன் மன்னிப்பும் கேட்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். பாஜகவின் பி டீம் இல்லவே இல்லை என்று வெறும் பேச்சளவில் பேசி வரும் சீமான், நடைமுறையில் பாஜக, ஆர்.எஸ்.எஸ்.சித்தாந்தங்களையும் கோட்பாடுகளையும் செயல்படுத்துவதில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சற்றும் சளைத்தவராக இல்லை என்பதையே அனைத்து நடவடிக்கைகளிலும் வெளிப்படுத்துகிறார் என்பது வெட்ட வெளிச்சமாகவே தெரிகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications