ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நெருக்கமானவர்.. முரசொலிக்கு பதில்
சென்னை: மறைந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் மிக நெருக்கமான தொடர்பு வைத்திருந்தவர் என்று திமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான முரசொலிக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தமிழகத் தலைவர் ஆடல் அரசன் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் ஆளும் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் வாட்ஸ் அப்பில் வந்தது என்ற தலைப்பில் ஒரு செய்தி இடம் பெற்றிருந்தது. அதில், நம் உயிர் உள்ளவரை தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் நுழையக் கூடாது- பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என தகவல் இடம் பெற்றது.

நெருக்கமான தொடர்பு
இதனை மறுத்து தமிழக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் ஆடல் அரசன் வெளியிட்ட அறிக்கை: முரசொலியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர்- ஆர்.எஸ்.எஸ். குறித்து வெளியான தகவல் முற்றிலும் தவறானது. அது பொய்யான தகவல் மட்டும் இல்லாமல், முத்துராமலிங்க தேவர் உயிருடன் இருந்தவரை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பும் கொண்டிருந்தார். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர்களுடன் நட்பு பாராட்டினார்.

முத்துராமலிங்கம் சொன்னது
ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் 2-வது தலைவர் கோல்வால்கர் 51-வது பிறந்த நாள் விழா 1956-ம் ஆண்டு நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. மதுரையில் நடைபெற்ற கோல்வாகர் பிறந்த நாள் விழாவுக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தலைமை வகித்தார். இந்த விழாவில் பேசிய முத்துராமலிங்க தேவர், தம் கருத்துகள் ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்துடன் இணைந்தே இருக்கின்றன என்றார்.

வெட்கக் கேடானது
உண்மை இப்படி இருக்க, தேச பக்தர்கள் மற்றும் தெய்வ பக்தர்களால் மதிக்கப்படும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பை எதிர்த்தார் என்பது பொய்யானது. ஆர்.எஸ்.எஸ். குறித்து தவறான எதிர்மறையான எண்ணத்தை ஏற்படுத்த திமுக, அதன் முரசொலி நாளேடு முயற்சிப்பது வெட்கக் கேடானது.

கண்டிக்கத்தக்கது
ஒரு மாநிலத்தை ஆளும் கட்சியானது, தனது அதிகாரப்பூர்வ பத்திரிகையில் ஆதாரமற்ற தகவல்களை எடுத்துப் பகிர்வது கண்டிக்கத்தக்கது. ஆர்.எஸ்.எஸ். குறித்து அவதூறு பரப்புவது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு ஆடல் அரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்திக்கு பிரதமர் மோடி வருகை தரக் கூடும் என ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டிருந்தன. இதனையொட்டி பல்வேறு கருத்துகள் சமூக வலைதளங்களில் வெளியாகின. அதனை முன்வைத்து முரசொலி இந்த தகவலை வெளியிட்டிருந்தது.












Click it and Unblock the Notifications