சென்னையில் அதிமுக நிவாரண நிகழ்ச்சியில் சிறுமி உயிரிழந்த விவகாரம்.. ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவு
சென்னை: அதிமுக வெள்ள நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் சிறுமி உயிரிழந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து ஆர்டிஒ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த வாரம் மிக்ஜாம் புயல் சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் பல பகுதிகளில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக கொட்டிய மழை என்பது சென்னையை மொத்தமாகப் புரட்டிப் போட்டது.

அதன் பிறகு இப்போது தான் சென்னை மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. நகரின் பல பகுதிகளில் நீர் வடிந்துவிட்ட நிலையில், தேங்கி இருக்கும் சில பகுதிகளிலும் அதை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது.
நிவாரண பொருள் வழங்கும் நிகழ்ச்சி: இதற்கிடையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு அரசியல் கட்சிகளும் நேரடியாக நிவாரணங்களை வழங்கி வருகிறது. அதன்படி அதிமுக சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு சென்னை கொருக்குப்பேட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது. அதை வாங்க பல்வேறு தரப்பினரும் அங்கே குவிந்தனர். அப்போது நிவாரண பொருட்களைப் பெறும் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கிய ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள கருணாநிதி நகரைச் சேர்ந்த 14 வயது சிறுமி அங்கே மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவரை மீட்ட பொதுமக்கள், சிறுமியை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும், மருத்துவமனைக்குப் போகும் வழியிலேயே அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
சிறுமி உயிரிழப்பு: சிறுமி மரணத்திற்கு நீதி கேட்டும், அதிமுகவினர் மீது வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி சனிக்கிழமை சாலை மறியல் போராட்டமும் நடத்தப்பட்டது. நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் சிறுமி உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி போலீசார் விசாரணையும் நடத்தினர். அதில் சிறுமி மூச்சுத்திணறியோ அல்லது கூட்ட நெரிசலில் சிக்கியோ உயிரிழக்கவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். குறிப்பாகச் சிறுமி நெரிசலில் நிற்கவே இல்லை என்றும் தனியாகவே நிற்பதும் சிசிடிவி காட்சிகளில் தெரிவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆர்டிஓ விசாரணை: சிறுமி கூட்ட நெரிசலில் சிக்கியதாலேயே பற்கள் உடைக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்த நிலையில், அதை மறுத்த போலீசார், மயங்கி கீழே விழுந்த போதே பற்கள் உடைந்ததாகத் தெரிவித்துள்ளனர். சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், அவர் மூச்சு திணறியோ அல்லது மிதிபட்டோ உயிரிழக்கவில்லை என்பது உறுதியானது. இருப்பினும், சிறுமி உயிரிழப்பிற்குக் காரணத்தைக் கண்டறியவே இப்போது ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications