ரூல்ஸ் மாறுகிறது சொத்து பத்திரத்தில்.. டிஜிட்டல் கையெழுத்து கட்டாயம்? வீடு வாங்குபவர்களுக்கு நிம்மதி
சென்னை: வீடு, மனை போன்ற சொத்துகள் பரிவர்த்தனையில் மோசடிகளை தடுக்க, பதிவுத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதை விரிவுப்படுத்தும் நோக்கில் மேலும் ஒரு சூப்பர் நடவடிக்கையை அரசு மேற்கொள்ள போகிறது. இதுகுறித்த தகவல்தான் தற்போது வெளியாகி, அனைவருக்கும் மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் தந்து வருகிறது.
தமிழக பதிவுத்துறையை பொறுத்தவரை, வீடு, மனை உள்ளிட்ட நிலம், கட்டிடம் போன்ற சொத்துகள் பரிவர்த்தனையில் நடக்கும் மோசடிகளை தடுக்க பல நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது.

பத்திரப்பதிவு
குறிப்பாக, சொத்து பதிவு செய்ய வரும் நபர்களின் அடையாள உறுதிப்படுத்தல் இப்போது கடுமையாக செய்யப்படுகிறது. ஆதார், பான் போன்ற அரசு ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகே பதிவு அனுமதி வழங்கப்படுகிறது. இதனால் போலி நபர்கள் மூலம் நடைபெறும் மோசடிகள் குறைக்கப்படுகின்றன.
அதேபோல பயோமெட்ரிக் பதிவு முறை கொண்டு வரப்பட்டுள்ளது... விற்பனையாளர், வாங்குபவர், சாட்சிகள் அனைவரின் கைரேகை, போட்டோவும் பதிவு செய்யப்படுகின்றன.. இதன் மூலம் ஒரே நபர் போலியாக பல பதிவுகள் செய்வதை தடுக்க முடிகிறது.
அதேபோல பவர் ஆஃப் அட்டார்னி மூலம் செய்யப்படும் சொத்து பரிவர்த்தனைகளில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முக்கியமாக, வெளிநாட்டில் உள்ளவர்கள் பெயரில் செய்யப்படும் பரிவர்த்தனைகளில் ஆவணங்கள் தீவிரமாக சரிபார்க்கப்படுகின்றன.
தமிழக பதிவுத்துறை
அதுமட்டுமல்லாமல், பழைய பதிவு ஆவணங்கள் அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்கல் செய்து, ஆன்லைனில் பார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வில்லங்க சான்றிதழ், பட்டா, சிட்டா, அடங்கல் போன்ற வருவாய் துறை ஆவணங்களுடன் பதிவு விவரங்கள் இணைக்கப்பட்டு சரிபார்க்கப்படுகின்றன. ஒருவேளை அந்த ஆவணங்கள் பொருந்தாவிட்டால், அந்த பதிவு உடனே தடுக்கப்பட்டு விடுகிறது..
பரிவர்த்தனைகள் குறித்த சந்தேகத்தை, பதிவு நிறுத்தி விசாரணை நடத்தும் அதிகாரம் சப்-ரெஜிஸ்ட்ரார் அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல பொதுமக்கள் எளிதில் புகார் அளிக்க ஹெல்ப்லைன் வசதிகளும், ஆன்லைன் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேற்கண்ட நடவடிக்கைகளால் சொத்து வாங்குவோர்-விற்போர் இருவரும் பாதுகாப்பாக பரிவர்த்தனை செய்யும் சூழல் உருவாகி வருகிறது.
டிஜிட்டல் கையெழுத்து
ஆனாலும், சார்-பதிவாளர்கள் எவ்வளவு கவனமாக இருந்தாலும், சில நேரங்களில் மோசடி பத்திரங்கள் பதிவு ஆகி விடுகின்றன. இதில், உண்மையான உரிமையாளருக்குத் தெரியாமல், விற்பவர் மற்றும் வாங்குபவர் கையெழுத்துகளை வெளியாட்கள் போலியாக போடும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.
இந்த வகை மோசடிகளை முழுமையாகவே பதிவுத்துறை முக்கிய அதிரடியை தற்போது கையில் எடுத்துள்ளது.. அதன்படி, சொத்து பத்திரப் பதிவில் "டிஜிட்டல் கையெழுத்து" முறை அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது..
புதிய சாப்ட்வேர் - ஸ்டார் 3.0
அரசு துறைகளில் கோப்புகள், உத்தரவுகள், கடிதங்கள் என எதுவானாலும் உயரதிகாரிகள் ஏற்கனவே டிஜிட்டல் கையெழுத்தை பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல், சொத்து பத்திரங்களிலும் இந்த முறையை கொண்டு வர வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக இதுநாள் வரை இருந்து வந்தது. இதை தடுக்கவே 'டிஜிட்டல்' கையெழுத்து முறை தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பதிவுத்துறை அதிகாரி ஒருவர் சொல்லும்போது, பொதுமக்கள் எங்கிருந்தும் பத்திரப்பதிவு செய்யும் வகையில் "ஸ்டார் 3.0" என்ற புதிய சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது. இப்போது சார் பதிவாளர்கள் உள்ளிட்ட பல நிலை அலுவலர்கள் டிஜிட்டல் கையெழுத்து முறையை பயன்படுத்தி வருகின்றனர்.
பாதுகாப்பு - குறையும் அபகரிப்புகள்
இதில், பாதுகாப்பான பத்திரப்பதிவை உறுதி செய்ய, பொதுமக்களும் டிஜிட்டல் கையெழுத்தை பயன்படுத்தும் வசதியை அறிமுகப்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது..
இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால், ஆன்லைன் பத்திரப்பதிவில் கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும், சொத்து மோசடிகளை பெருமளவில் கட்டுப்படுத்த முடியும்.. டிஜிட்டல் கையெழுத்து முறை வந்தால், சொத்து உரிமையாளர்களுக்கு அதிக பாதுகாப்பு கிடைப்பதுடன், போலி ஆவணங்கள் மூலம் நடைபெறும் அபகரிப்புகளும் குறையும் " என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications