ஓரணியில் தமிழ்நாடு.. வீடு வீடாக சென்று பிரச்சாரத்தை தொடங்கிய திமுக.. ஆழ்வார்பேட்டையில் ஸ்டாலின் பரப்புரை
சென்னை: ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் மிகப்பெரிய அளவில் உறுப்பினர் சேர்க்கை பணிகளை திமுக முன்னெடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக இன்று முதல் வரும் 45 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வீடுவீடாகச் சென்று எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் மக்களை சந்திக்கிறார்கள். இன்று முதல்வர் ஸ்டாலின் ஆழ்வார்பேட்டையில் மக்களை சந்தித்து பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் வரும் 2026 ஏப்ரல் - மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியிருப்பதால் அரசியல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள திமுக வரும் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்ல வேண்டும் என்ற இலக்குடன் தனது தேர்தல் வியூகத்தை அமைத்துள்ளது.

ஓரணியில் தமிழ்நாடு
வலுவான கூட்டணியுடன் இருக்கும் திமுக தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளது. நான்கு ஆண்டுகால ஆட்சியில் நிறைவேற்றிய மக்கள் நலத்திட்டங்கள் உள்ளிட்டவற்றை மக்களிடம் எடுத்து விளக்க வேண்டும் என்று கட்சியினருக்கு கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் மிகப்பெரிய அளவில் உறுப்பினர் சேர்க்கை பணிகளை திமுக முன்னெடுத்துள்ளது.
45 நாட்கள்
முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், திமுகவுக்கான உறுப்பினர் சேர்க்கைக்காக மட்டுமல்ல; இது தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க எல்லோரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி. ஓரணியில் தமிழ்நாடு' இயக்கத்தில் இணைந்தவர்களில் விருப்பம் உள்ளவர்கள் திமுகவில் உறுப்பினர்களாகவும் இணைவார்கள்.
சாதி, மதம், கட்சி சார்பு என எதையும் பார்க்காமல் தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தையும் நாம் சென்றடைய வேண்டும். ஜுலை 1 ஆம் தேதி தொடங்கி, 45 நாட்கள் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு நடைபெறும்! களத்தில் செயல்படும் நாம் நான்கு படிநிலைகளில் செயல்பட வேண்டும்" என்று கூறியிருந்தார்.
வீடு வீடாக சென்று
ஜூலை 3 ஆம் தேதியான இன்று தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வீடுவீடாகச் சென்று மக்களைச் சந்திக்க வேண்டும். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் எல்லாரும் அவரவர் சொந்த வாக்குச்சாவடிகளில் உள்ள வீடுகளுக்கு நேரில் செல்ல வேண்டும். கழகச் செயல்வீரர்கள் ஒருவர் விடாமல் வீட்டுக்கு வீடு சென்று பரப்புரைச் செய்வதை உறுதி செய்திட வேண்டும் என்று ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.
அதன்படி, அமைச்சர்கள் இன்று வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து அரசின் சாதனைகளை சொல்லி பிரசாரத்தை முன்னெடுத்தனர். முதல்வர் மு.க ஸ்டாலின் தனது பரப்புரையை இன்று தொடங்கினார். ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்கு அருகே உள்ள வீடுகளுக்கு சென்று ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். வீடு வீடாக சென்று அரசின் சாதனைகளை மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் எடுத்துரைத்தார்.












Click it and Unblock the Notifications