முதல்வரை அவதூறாக பேசியதாக கைதான சாட்டை துரைமுருகனுக்கு ஜாமீன்! 'இனிதான் இருக்கு' ஆதரவாளர்கள் ஆரவாரம்
சென்னை: முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டிருந்த, யூடியூபர் சாட்டை துரைமுருகன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சாட்டை துரைமுருகன், நாம் தமிழர் கட்சியில் தீவிரமாக செயல்பட்டுவந்தவர். பிறகு கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து "சாட்டை" என்ற பெயரில் ஒரு யூடியூப் சேனல் ஒன்றை நடத்திவருகிறார்.
இதில் திமுக தலைவர்களை கடுமையாக கிண்டல் கேலி செய்து வீடியோ பதிவேற்றம் செய்து வந்தார்.

கன்னியாகுமரி போராட்டம்
கடந்த அக்டோபர் மாதம், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நாம் தமிழர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார் சாட்டை துரைமுருகன். அப்போது முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு அரசு மலைகளை குடைவதை தடுக்க தவறிவிட்டது, அரசு இயற்கை வளங்களை காக்கவில்லை என்று விமர்சனம் வைத்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானும், இந்த மேடையில் பேசினார்.

சாட்டை துரைமுருகன் விமர்சனம்
தமிழ்நாடு முதல்வரையும் கேரளா முதல்வரையும் ஒரு வார்த்தையை குறிப்பிட்டு ஒப்பிட்டு சாட்டை துரைமுருகன் பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிராக கன்னியாகுமரியில் போலீசாரிடம் திமுக சார்பாக புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதியப்பட்டது. அதோடு தமிழ்நாடு முழுக்க திமுகவினர் பலர் சாட்டை துரைமுருகனுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து இருந்தனர். இணையத்திலும் திமுகவினர் பலர் சாட்டை துரைமுருகனை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

கைது
இதுதொடர்பாக சாட்டை முருகன் உள்ளிட்ட இருவர் மீது தக்கலை உதவி ஆய்வாளர் ராஜசேகர் கொடுத்த புகாரில் சாட்டை துரைமுருகன் மீது போலீசார் 143, 153, 153A, 505 (2),506(1), 269 ஆகிய ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். அதனை தொடர்ந்து, ஆர்ப்பாட்டம் முடிவடைந்த பின்பு சென்னைக்கு செல்ல முயன்ற சாட்டை முருகனை நள்ளிரவில் போலீசார் கைது செய்தனர்.

ஜாமீன்
இந்த வழக்கில் தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில், நேற்று சாட்டை துரைமுருகனுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. அவர் விடுதலையாவதால் திமுக ஆதரவாளர்கள் கலக்கத்தில் உள்ளதாகவும், இனி சாட்டை வேகமாக சுழலும் என்றும் சமூக வலைத்தளங்களில் நாம் தமிழர் ஆதரவாளர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications