Sabarimala Ayyappa: ”சாமியே.. ஐயப்போ” விரதத்தை தொடங்கிய பக்தர்கள்.. இன்று முதல் தினமும் 90 ஆயிரம் பக்தர்கள் அனுமதி
சென்னை: சபரிமலை ஐயப்பன் கோயில் நேற்று முதல், மண்டல, மகர விளக்கு சீசனுக்காக நடை திறக்கப்பட்டது. இன்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இன்று முதல் தினமும் 90,000 பக்தர்கள் அய்யப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இதில் 70 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்வதர்களுக்கும், 20 ஆயிரம் பக்தர்கள் உடனடி தரிசனம் வாயிலாகவும் அனுமதிக்கப்படுகிறார்கள்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. கார்த்திகை மாதம் பிறந்தாலே, தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா என பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்து வருகிறார்கள்.

சபரிமலை ஐயப்பன் கோயில்
குறிப்பாக தமிழகத்தில் அதிகளவிலான பக்தர்கள் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டி ஐயப்பனை வழிபட்டு வருகிறார்கள். இதனால் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு படையெடுப்பர். இதனால் அங்கு கூட்டம் அலைமோதும். மேலும் சாமியே சரணம் என்ற பக்தி முழக்கமும் அதிகமாக இருக்கும்.
கார்த்திகை மாதம் இன்று பிறந்துள்ள நிலையில், தற்போது சீசன் தொடங்கியுள்ளதால், சிறப்புமிக்க நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனுக்காக நேற்று மாலை 5 மணிக்கு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார்.
பக்தர்கள் அனுமதி
பின்னர் 18 ஆம் படிக்கு கீழ் உள்ள கற்பூர ஆழியில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி சன்னிதானத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட விளக்கு தீபத்தை வைத்து தீ மூட்டினார். தொடர்ந்து 18 ஆம் படிக்கு கீழ் இரு முடி கட்டுகளுடன் காத்திருந்த சபரிமலை புதிய மேல்சாந்தி பிரசாத், மாளிகப்புரம் மேல் சாந்தி மனு ஆகியோரை 18 ஆம் படி வழியாக அருண்குமார் நம்பூதிரி சன்னிதானத்திற்கு அழைத்து வந்தார்.
இதனை தொடர்ந்து, புதிய மேல் சாந்திகள் பிரசாத் நம்பூதிரி, மனு நம்பூதிரி ஆகியோருக்கு மூலம் மந்திரம் சொல்லி கொடுத்து தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடத்தினார். இதனை தொடர்ந்து 18 ஆம் படிக்கு கீழ் பகுதியில் இருமுடி கட்டுகளுடன் காத்திருந்த பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
நடை திறக்கப்பட்டது
பின்னர் இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று கார்த்திகை மாதம் பிறந்துள்ள நிலையில், அதிகாலை 3 மணிக்கே நடை திறக்கப்பட்டது. வழக்கமான பூஜை மற்றும் வழிபாடுகள் தொடங்கி நடந்து வருகிறது. இன்று நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், 11 மணி வரை நெய் அபிஷேகம், உச்ச பூஜைக்கு பிறகு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். பின்னர் மீண்டும் மதியம் 3 மணிக்கு நடை திறக்கப்படும்.
மண்டல, மகர விளக்கு பூஜை எப்போது?
இன்று மாலை 6 மணிக்கு சிறப்பு தீபாராதனையும், இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜைக்கு பிறகு இரவு 11 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும். சிகர நிகழ்ச்சியாக அடுத்த மாதம் 27 ஆம் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 14 ஆம் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறும்.
சபரிமலை சீசன் தொடங்கியுள்ள நிலையில் தினமும் 90,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றன. இதில் ஆன்லைன் முன்பதிவு மூலம் 70,000 பேரும், உடனடி தரிசனம் மூலம் 20,000 பேரும் அனுமதிக்கப்பட உள்ளனர். இதில் 1 மாத காலத்துக்கான முன்பதிவு இப்போதே முடிவடைந்து விட்டது. இதனால் உடனடி தரிசன முன்பதிவு மூலம் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்டுகின்றனர்.
போக்குவரத்து நெரிசல்
சபரிமலை கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக இதுவரை 60 லட்சம் டின் அரவணை பிரசாதம் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் பகர்தகளுக்காக வழி நெடுகிலும் குடிநீர், சுக்கு நீர் வினியோகம் 24 மணிநேரமும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று சபரிமலை சீசன் தொடங்கிய நிலையில் தமிழக கேரள எல்லைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.











Click it and Unblock the Notifications