பொற்கொடி தொகுதியில் உள்ளடி வேலை? திருமாவளவன் சொன்னதை கவனிச்சீங்களா!
சென்னை: தேர்தல் ரிசல்ட்டுக்காக மொத்த தமிழ்நாடும் காத்துக்கிடக்கிறது. இந்நிலையில், திருமாவளவன் பேசியிருக்கும் விஷயம் விவாதங்களை தூண்டியிருக்கிறது.
திமுக கூட்டணியில் களமிறங்கி இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, தொடக்கம் முதல் கடும் அதிருப்தியில் இருந்தது. குறிப்பாக சீட் ஒதுக்கீடு விஷயத்தில் மற்ற கட்சிகளை விட கூடுதல் சீட் கொடுக்கப்பட்டிருந்தாலும், திருமாவளவன் பெரிய அளவில் திருப்தியடையவில்லை.

இப்படி இருக்கையில் இன்று அவர் பேசியிருக்கும் விஷயங்கள் சலசலப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. "திமுக அல்லது திமுக கூட்டணிக்கு எதிரான வாக்குகளை பலர் போட்டி போட்டு பிரிக்கிறார்கள், பங்கு போடுகிறார்கள். பொதுவாக திராவிடக் கட்சிகளுக்கு திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கு எதிரான ஒரு கருத்து இந்த அரசியல் களத்தில் நீண்டகாலமாக இருந்து வருகிறது. எதிர்ப்பு வாக்குகளும் இருந்து வருகின்றன.
அந்த எதிர்ப்பு வாக்குகளை ஒவ்வொரு காலகட்டத்திலும் அவ்வப்போது தோன்றிய மாற்று அரசியல் சக்தி என்று அடையாளப்படுத்திக்கொண்ட அரசியல் கட்சிகள் பெற்றிருக்கின்றன, அல்லது பங்கு போட்டு இருக்கின்றன.
ஆகவே இந்த முறை திமுகவை எதிர்த்து அல்லது திமுக கூட்டணியை எதிர்த்து களத்திலே நிற்கும் அதிமுக, அதிமுக தலைமையிலான கூட்டணி, விஜய் தலைமையிலான கட்சி, சீமான் தலைமையிலான கட்சி இவர்கள் அத்தனை பேருக்குமே திமுக எதிர்ப்பு என்பதுதான் பிரதானமான, முதன்மையான அரசியல். அல்லது திமுக கூட்டணி எதிர்ப்பு என்பதுதான் முதன்மையான அரசியல்" என்று பேசியிருந்தார்.
மேலும், தோழமை கட்சிகளுக்காக தேர்தல் களத்தில் விசிகவினர் சரியாக வேலை செய்யவில்லை என்று ஒப்புக்கொண்டிருக்கிறார். இப்படி பேசியிருப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியிருக்கிறது.
குறிப்பாக சென்னை திருவிக நகர் தொகுதியில் அதிமுக சார்பில் களமிறக்கப்பட்டிருந்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கிற்கு எதிராக விசிகவினர் வேலை பார்க்காமல், ஆதரவாக வேலை பார்த்தார்களோ? என்கிற கேள்வியை திருமாவளவனின் பேச்சு எழுப்பியிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
தலித் மக்களின் பிரதிநிதியாக பொற்கொடி களமிறக்கப்பட்டிருந்தார். ஆனால், அவர் அதிமுக-பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்டிருந்தார். அவருக்கு ப.ரஞ்சித் உட்பட தலித் செயற்பாட்டாளர்கள் பலரும் பரவலாக ஆதரவு தெரிவித்திருந்தனர்.
தலித் உரிமைகள் பற்றி பேசும் ப.ரஞ்சித் உள்ளிட்டோர் பாஜக கூட்டணிக்கு வாக்கு கேட்பது வேடிக்கையாக இருப்பதாக திமுகவினர் கண்டனம் தெரிவித்திருந்தனர். மத்திய அரசின் மீது கடும் விமர்சனங்களை கொண்டிருக்கும் இவர்கள், தேர்தல் அரசியல் என்று வரும்போது மட்டும் ஏன் பாஜக பக்கம் சாய்கிறார்கள்? என்றும் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இப்படி இருக்கையில் திருமாவளவன் வெளிப்படையாக, விசிகவினர் வேலை செய்யவில்லை என்று பேசியிருப்பது பொற்கொடி போட்டியிட்ட தொகுதியை குறிப்பிட்டுதான் சொல்லியிருக்கிறாரோ? என்கிற கேள்வியை பலரும் எழுப்பியிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications