அரசியலில் இறங்குகிறேன்.. என்னோடு வாருங்கள்.. சகாயம் ஐஏஎஸ் அதிரடி அழைப்பு
சென்னை: அரசியலில் களம் காண்போம் என ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் ஆதம்பாக்கத்தில் நிகழ்ந்த பொதுக் கூட்டத்தில் அறிவித்துள்ளார். மேலும் தன்னை தமிழக அரசு அவமதித்துவிட்டதாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
Recommended Video
ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த சகாயம் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியராக இருந்த போது கிரானைட் முறைகேடு, மணல் கொள்ளை உள்ளிட்டவைகளுக்கு எதிராக இருந்தார்.
நரபலி சம்பவத்தில் சுடுகாட்டில் புதைத்த உடல்களை இரவோடு இரவாக எடுத்துச் சென்றுவிட்டால் என்ன செய்வது என நினைத்த சகாயம் இரவு முழுவதும் சுடுகாட்டிலேயே இருந்தார். அடுத்த நாள் அங்கு ஆட்களை வரவழைத்து உடல்களை தோண்டி எடுத்து நரபலி கொடுக்கப்பட்டது என்பதை நிரூபித்து கையும் களவுமாக பிடித்தார்.
சகாயம்
அத்தகைய நேர்மையான அதிகாரியான சகாயம் அரசியலுக்கு வர வேண்டும் என்பது இளைஞர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இவர் பணியாற்றும் இடங்களில் லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து என்ற வாசகத்தை எழுதி வைத்திருந்தார். இவரது சேவையால் ஈர்க்கப்பட்டவர்கள் இவர் அரசியல் கட்சியை தொடங்குமாறு வற்புறுத்தி வந்தனர்.
அரசியலில் ஈடுபட
அவர் மக்கள் பாதை அமைப்பை தொடங்கி மக்களுக்கு சேவையாற்றி வந்தார். பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற அவர் அரசியலுக்கு எப்போது வேண்டுமானாலும் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியலில் ஈடுபடவே இவர் தனது பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றதாகவும் சொல்லப்படுகிறது.
முதல்வர் வேட்பாளர்
இதனிடையே சகாயத்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த எத்தனை பேர் ஆதரவு அளிக்கிறார்கள் என ஆழம் பார்க்க இணையதளம் மூலம் கணக்கெடுப்பையும் அவரது ஆதரவாளர்கள் நடத்தியுள்ளனர். இதில் 1 கோடி பேரின் ஆதரவே டார்கெட்டாக இருந்தது. இந்த முயற்சி கனிந்திருக்க வாய்ப்பிருப்பதால் அவர் இன்றைய தினம் மாலை 4 மணிக்கு பொதுக் கூட்டத்தை அறிவித்திருந்தார்.
பொதுக் கூட்டம்
இந்த பொதுக் கூட்டத்தில் சகாயம் பேசுகையில் மதுரை ஆட்சியராக இருந்த போதும் சரி கோஆப் டெக்ஸில் இருந்த போதும் சரி பல சாதனைகளை புரிந்த போதும் தமிழக அரசு என்னை அவமதித்துவிட்டது. சுடுகாட்டில் படுத்திருக்க வேண்டும் என்று எனக்கென்ன தலையெழுத்தா. அங்கிருக்கும் ஆவிகளை விட ஊழல் செய்யும் பாவிகள் மோசமானவர்கள். அரசியலுக்கு நான் வருகிறேன். இந்த சட்டசபை தேர்தலில் களம் காண்போம் என்றார் சகாயம்.