சாகித்ய அகாடமி விருதுகள்: விஷ்ணுபுரம் சரவணனுக்கு பால புரஸ்கார்! லட்சுமிஹர்க்கு யுவ புரஸ்கார் விருது!
சென்னை: 2025ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் பால சாகித்ய புரஸ்கார் விருது சிறார் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கும், யுவ புரஸ்கார் விருது இளம் எழுத்தாளர் லட்சுமிஹர்க்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த இலக்கிய படைப்பாளிகளுக்கு ஆண்டு தோறும் மத்திய அரசு, சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கி வருகிறது. 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த குழந்தைகளுக்கான இலக்கியப் படைப்புகளுக்கு பால சாகித்ய புரஸ்கார் விருதும், 35 வயதுக்குட்பட்ட இளம் எழுத்தாளர்களுக்கு யுவ புரஸ்கார் விருதும் வழங்கப்படுகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார் மற்றும் பால சாகித்ய புரஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 'ஒற்றைச் சிறகு ஓவியா' என்ற சிறார் நூலுக்காக எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு 'பால சாகித்ய புரஸ்கார்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் விஷ்ணுபுரம் என்ற ஊரில் பிறந்த விஷ்ணுபுரம் சரவணன், முன்னணி ஊடகங்களில் பணியாற்றியவர். கதைசொல்லி, சிறார் எழுத்தாளர் எனப் பல தளங்களில் இயங்கி வருகிறார். ஆனந்த விகடன் விருது, வாசகசாலை விருது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
அதே போல் 'கூத்தொன்று கூடிற்று' என்ற சிறுகதை தொகுப்புக்காக மதுரையைச் சேர்ந்த எழுத்தாளர் லட்சுமிஹர்-க்கு சாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. யாவரும் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்நூல் லட்சுமிஹர் எழுதிய நான்காவது சிறுகதைத் தொகுப்பு.
இளம் எழுத்தாளர் லட்சுமிஹர் மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டியில் உள்ள கீழ்செம்பட்டியில் பிறந்தவர். பொறியியல் மற்றும் படத்தொகுப்பில் பட்டம் பெற்றவர். திரைப்பட உருவாக்கம் சார்ந்த பணிகளில் இயங்கி வருகிறார்.












Click it and Unblock the Notifications