தேடி வந்த சம்போ செந்தில்? ஆம்ஸ்ட்ராங் உடன் என்ன தகராறு? பால் கனகராஜ் ஓபன் டாக்!
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி சம்போ செந்திலுடன் தனக்கு இருந்த தொடர்பு எந்த மாதிரியானது என்பது குறித்து வழக்கறிஞர் பால் கனகராஜ் விரிவாக விளக்கம் அளித்துள்ளார்.
பிஎஸ்பியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி சென்னை பெரம்பூர் வேணுகோபால் சுவாமி கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டின் அருகிலேயே வெட்டிக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக முதற்கட்டமாக 11 பேரை போலீசார் கைது செய்து அவர்களைச் சிறையில் அடைத்தனர். பின்னர் இவர்களைச் சிறைக்காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரித்து வந்தநிலையில் ரவுடி திருவேங்கடம் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தப் படுகொலை தொடர்பாக வழக்கறிஞர்கள் மலர்க்கொடி சேகர், ஹரிஹரன், சதீஷ் ஆகியோர் கைதானநிலையில் தலைமறைவாக இருந்துவந்த ஆற்காடு சுரேஷின் மனைவியும் பாஜக முன்னாள் நிர்வாகியுமான அஞ்சலை சில நாட்கள் முன்னதாக போலீசார் ஓட்டேரியில் வைத்து கைது செய்தனர். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ரவுடி சம்போ செந்தில் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்தது. ஆகவே சம்போ செந்தில் என்ற செந்தில்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடந்த இரண்டு நாட்கள் முன்னதாக திடீரென்று பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் பால் கனகராஜை காவல்துறை அதிகாரிகள் அழைத்து விசாரித்துள்ளனர். அது அரசியல் வட்டாரத்தில் ஒரு மிகப்பெரிய அதிர்வலையைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில் வழக்கறிஞர் பால் கனகராஜ் ஒரு யூடியூப் சேனலுக்கு இந்த விசாரணை தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். அவர் பேசும் போது, "ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக பிஎஸ்பி புதிய மாநிலத் தலைவராகப் பதவியேற்றுள்ள ஆனந்தன் ஒரு சந்தேகத்தைக் கிளப்பினார். பார் கவுன்சில் தேர்தல் 2018இல் நடந்தது. அந்தத் தேர்தலில் தோல்வியுற்ற வழக்கறிஞர்களுக்கும் இந்தக் கொலையில் சம்பந்தம் இருக்கக்கூடும் என நாங்கள் நம்புகிறோம் என்று பேசி இருந்தார். அந்தக் காலகட்டத்தில் பார் கவுன்சில் தேர்தலில் சேர்மன் பதவிக்குப் போட்டியிட்டுத் தோற்றவன். அதனடிப்படையில் காவல்துறை என்னை விசாரிக்க அழைத்தது.
வெற்றி பெற்ற நபர் ஆம்ஸ்ட்ராங்கிற்கு வேண்டிய நபர். காவல்துறையே என்னைப் பற்றி மறைமுகமாக விசாரித்திருக்கலாம். 35 ஆண்டுகளாக வழக்கறிஞராக இருக்கிறேன். அப்படி உள்ளபோது என்னைப் பற்றி பலர் அறிவார்கள். நான் பல ரவுடிகளின் தரப்பு வழக்கறிஞராக நீதிமன்றத்தில் வழக்கு சம்பந்தமாக ஆஜராகி வாதாடி இருக்கிறேன்.
அதனடிப்படையில் என் மீது சந்தேகம் எழுந்துள்ளது. ஆகவே என்னை அழைத்து காவல்துறையினர் விசாரித்தனர். என் தரப்பு உண்மைகள் என்ன என்பதை நான் தெளிவாக காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணையின் போது தெரிவித்திருக்கிறேன். காவல்துறை தனது கடமையைச் செய்துள்ளது. அதைத் தவிர இதில் வேறு ஒன்றுமே இல்லை. என்னைப் போலவே 11 பேர் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றவர்கள் இருக்கிறார்கள். என்னைப் போலவே அவர்களையும் ஒருவேளை காவல்துறை அழைத்து விசாரிக்கக்கூடும்.
ஒரு வழக்கறிஞராக நான் தமிழ்நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்கள் சென்று வழக்கு நடத்தி இருக்கிறேன். அதில் குற்றஞ்சாட்டப்பட்ட ரவுடிகள் இருக்கின்றனர். அவர்கள் வழக்குத் தொடர்பாக என்னிடம் தொலைபேசியில் பேசியும் இருக்கிறார்கள். சென்னையில் கூட குற்றப்பின்னணி உள்ள பல பிரபலமானவர்களுக்கு நான் வாதாடி இருக்கிறேன். அவர்களைப் பற்றி எனக்குத் தெரிந்த தகவல்களைப் பெறுவதற்காகவும் காவல்துறை என்னை விசாரிக்க முடிவு செய்திருக்கலாம்.
சம்போ செந்தில் என்பவர் கடந்த சில வருடங்கள் முன்பாக 2 கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது அவர் இந்தக் கொலைக்கு எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தவறுதலாக என் பெயரை காவல்துறை இணைத்துள்ளது. ஆகவே உயர் அதிகாரிகளிடம் பேசுங்கள் என்று என்னிடம் வந்தார். அப்போது நான் சில உயர் அதிகாரிகளிடம் பேசினேன். அதற்கு அதிகாரிகள், 'இல்லை. இவருக்குத் தொடர்பு இருக்கிறது. அவரை நாங்கள் வழக்கில் இணைக்க இருக்கிறோம்' என்றார்கள். உடனே நான் சம்போ செந்திலிடம், 'உங்களுக்கு வழக்கில் தொடர்பு இருப்பதாகச் சொல்கிறார்கள். நீங்கள் வழக்கை சட்டரீதியாக எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்'என்றேன். அதன்பின்னர் 7 ஆண்டுகளாக அவரிடம் எந்தத் தொடர்பும் எனக்கு இருந்ததில்லை.
கடந்த 2015இல் ஆம்ஸ்ட்ராங் மீது ஒரு புகார் கொடுக்க வேண்டிய சூழல் வந்தது. அது ஒரு தவறான தகவல் என்பது பின்னர் அறிந்தேன். அவரும் என்னை நேரில் சந்தித்து 'உங்கள் மீது எனக்கு எந்தவிதமான வருத்தமோ காழ்ப்புணர்ச்சியோ கிடையாது' என்றார். ஆகவே அந்தப் புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவிட்டோம். இதற்குப் பிறகு நானும் ஆம்ஸ்ட்ராங்கும் குடும்ப ரீதியாக நண்பர்களாகிவிட்டோம். அவர் என் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு வந்துள்ளார். நானும் சென்றுள்ளேன். எனக்கும் அவருக்குமான கருத்து வேறுபாடு ஏற்பட்டு 6 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. எந்தவித காழ்ப்பும் இல்லை என்று ஆம்ஸ்ட்ராங்கே என்னிடம் நேரடியாகப் பேசி பிரச்சினையும் முடிக்கப்பட்டுவிட்டது. ஆனால், இத்தனை ஆண்டுகள் கழித்து ஆனந்தன் ஒரு புகாரைக் கிளப்புகிறார்.
அதற்குப் பின்னால் என்ன உள்நோக்கம் இருக்கும் என்பதை காவல்துறை அதிகாரிகள் அறிவார்கள். இன்னும் 2 ஆண்டுகளில் பார் கவுன்சில் தேர்தல் நடைபெற உள்ளது. நான் போட்டியிட இருக்கிறேன். என் பெயரை கெடுத்தால் வாக்குகள் சிதறும். ஆகவே இதைச் சிலர் செய்கிறார்கள். ஆம்ஸ்ட்ராங் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடவில்லை. அவருக்கும் கவுன்சிலுக்கும் சம்பந்தமே இல்லை. அவர் மறைமுகமாக யாருக்கேனும் ஆதரவு கொடுத்திருக்கலாம். அந்தத் தேர்தலில் வென்றவர் 15 வாக்குகளை வாங்கினார். 11 வாக்குகளை வாங்கினேன்.
ஒருவேளை ஆம்ஸ்ட்ராங்கின் தலையீடு இருந்திருந்தால் எனக்கு ஓட்டுப் போட்ட 11 பேரும் எதிரணிக்கு தானே போட்டு இருப்பார்கள். எனவே இந்தக் கொலை விவகாரத்தில் தேவையற்ற ஒரு புரளியை பிஎஸ்பி தலைவர் ஆனந்தன் கிளப்பி விட்டுள்ளார். அதற்குப் பின் என்ன இருக்கிறது எனக்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரை காவல்துறை விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்துவிட்டு வந்துள்ளேன்" என்கிறார்.












Click it and Unblock the Notifications