உலகை அதிரவைக்கும் 6 கிமீ இருட்டு.. சென்னையில் தயாராகும் 'குட்டி அரக்கன்'... யாரு இந்த சமுத்ரயான்?
சென்னை: சந்திராயன் 3 வெற்றிக்கு பிறகு சமுத்ரயான் திட்டம் என்ற ஆழ்கடல் ஆராய்ச்சிக்கு மூன்று நபர்களுடன் samudrayaan matsya 6000 அனுப்பப்படுகிறது. இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி கனவை அதன் தோல்வி படிநிலைகளை கடந்து வெற்றி அடைந்து இந்திய விஞ்ஞானிகளின் திறமையை உலகிற்கு பறை சாற்றி உள்ளது இஸ்ரோ.
இந்தியாவை பொறுத்தவரை மூன்று பக்கம் கடல் வளம் உள்ளது. நாட்டின் மொத்தம் உள்ள பகுதிகளில் 30 சதவீதம் கடலோரப் பகுதிகள் ஆகும்.இங்கு பல கோடிக்கணக்கான மக்கள் வாழ்கிறார்கள். இந்த பகுதிகளில் மீன்பிடி, மீன் வளம் மற்றும் சுற்றுலா,வாழ்வாதாரம் ஆகிய நீர் சம்பந்தப்பட்டவற்றை தொழிலாக கொண்டவை ஆகும். 9 கடலோர மாநிலங்கள் மற்றும் 1382 தீவுகளை தாயகமாகவும், 7617 கிமீ நீளமுள்ள கடலோரத்தையும் இந்தியா தன்னுள் உள்ளடக்கி உள்ளது.

அந்த கடலில் உள்ள வளத்தை பற்றிய ஆழ ஆய்வினைத்தான் மேற்கொள்ள இந்தியா தற்போது சமுத்ரயான் திட்டத்திற்கு தயார்படுத்தி உள்ளது.இந்தியாவின் ஆழ்கடல் ஆய்வுத்திட்டத்தின் கீழ், புவி அறிவியல் துறை அமைச்சகத்தினால் சமுத்ரயான் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
ஆழ்கடல் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களை ஆழ்கடலுக்குள் அனுப்பி, கடலுக்கு அடியில் என்னயிருக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்யவே சமுத்ரயான் திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறதாம். இதற்காக இந்தியா, மூன்று பேரை 6,000 மீட்டர் ஆழத்திற்கு இறக்கி அனுப்ப உள்ளது. இதற்காகவே 'மத்ஸ்யா 6000' என்ற நீர்மூழ்கிக் கப்பல் தயாரிக்கப்பட்டு வருகிறது.
புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான சென்னையைச் சேர்ந்த தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் (NIOT) மூலமாகே 'மத்ஸ்யா 6000' என்ற நீர்மூழ்கி கப்பல் போன்ற வாகனம் வடிவமைக்கப்படுகிறது.
நீர்மூழ்கி கப்பல் போன்ற இந்த வாகனம் சாதாரண செயல்பாட்டின் கீழ் 12 மணிநேரமும், மனித பாதுகாப்புக்காக அவசரகாலத்தில் 96 மணிநேரமும் தாங்கும் திறன் கொண்டதாக உருவாக்கி உள்ளார்கள்.இதன் வடிவமைப்பு நிறைவடைந்துள்ளது. தற்போது இந்த வாகனத்தின் பல்வேறு கூறுகள் சோதனை செய்யப்படுகிறது.
சமுத்ரயான் திட்டத்தின் கீழ், தாதுக்கள், நுண் உலோகங்கள் போன்ற ஆழ்கடல் வளங்களை ஆய்வு செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது. கடலுக்கு அடியில்,நிக்கல், கோபால்ட், மாங்கனீசு, பூமியின் அரிய தாதுக்கள் போன்ற கனிம வளங்களை கண்டுபிடிப்பதற்கும், அதன் மாதிரிகளை சேகரிப்பதற்கும் மனிதர்களை ஆழ்கடலுக்கு அனுப்ப முடிவுசெய்யப்பட்டுள்ளது. அறிவியல் ஆராய்ச்சி தவிர, ஆழ் கடல் சுற்றுலா பணிகளைத் தொடங்கவும் திட்டமிட்டுள்ளார்கள்.
சென்னையில் உள்ள தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் சமுத்ரயான் 'மத்ஸ்யா 6000' நீர்மூழ்கிக் கப்பல் கட்டுமானத்தினை அண்மையில் மத்திய புவி அறிவியல் அமைச்சர் கிரண் ரிஜிஜு பார்வையிட்டார் அது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
ஆழ்கடலுக்குள் சென்று ஆய்வு மேற்கொள்ளும் சமுத்ரயான் திட்டம் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், விண்வெளியைப் போல கடலின் ஆழத்தை நாம் ஆராய வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார். இந்த திட்டம் காரணமாக அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் சீனா போன்ற நாடுகளின் வரிசையில் ஆழ்கடல் திட்டத்தில் இந்தியா இணைந்துள்ளது.












Click it and Unblock the Notifications