”தீட்டு” என்பதை அடிப்படை கொள்கையாக கொண்டதுதான் சனாதனம்: மீண்டும் தாக்கும் திருமாவளவன்!
சென்னை: ஜாதிய தீட்டு, சமூகங்களிடையே தீட்டு, பெண்களுக்கு தீட்டு என தீட்டு என்பதை அடிப்படையாக கொண்டதுதான் சனாதனம் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
சென்னையில் மலேசியா எழுத்தாளர் பெ இராஜேந்திரன் எழுதிய மந்திரக் கணங்கள் என்னும் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு தொல்.திருமாவளவன் பேசியதாவது: சனாதனம் என்பது சமத்துவத்தை மறுக்கிறது. சனாதனம் என்பது சகோதரத்துவத்தை மறுக்கிறது. தந்தை பெரியார் காலத்தில் இருந்தே பேசப்படுகிற சொல்தான் சனாதனம். இன்று புதியதாக பேசுவது அல்ல. அயோத்திதாச பண்டிதர் காலத்தில் ஆரியம் என்று சொல்லப்பட்டதே பின்னர் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் காலத்தில் பார்ப்பனியம் என அழைத்தோம். அதுவே இன்றைய இந்துத்துவா.

சனாதனம் என்பது ஒரு பெண் என்பவள் ஆண்களுக்கு கட்டுப்பட்டவள் என்கிறது; ஆணின் இச்சைக்கு உரியவள் என்கிறது. வாரிசுகளைப் பெறக்கூடிய இயந்திரம் என்கிறது. இதுதான் சனாதனம் வலியுறுத்தக் கூடியது. அதாவது சனாதனம் என்பது அழியாதது- நிலையானது என சொல்லப்படுகிறது. பிறப்பால் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்பதை நிலைப்படுத்துகிறது.
எந்த ஒரு கடவுளுமே இப்படியெல்லாம் பாகுபாடு காட்டு என்று சொல்வது இல்லை. மதத்தை பரப்புகிறவர்கள்.. கடவுளை பரப்புகிறவர்கள்தான் இந்த பாகுபாட்டை வளர்க்கின்றனர். எந்த ஒரு மதத்திலுமே சொல்லப்படாதது தீட்டு கொள்கை. ஆனால் சனாதனம் தீட்டு கொள்கையை வலியுறுத்துகிறது.
தீட்டு என்பது தாழ்த்தப்பட்ட மக்கள் மீதானது மட்டும் அல்ல. ஒவ்வொரு ஜாதிக்குள்ளேயும் கூட தீட்டு இருக்கத்தான் செய்கிறது. ஒவ்வொரு மனிதர்களுக்கும் கருத்தியல் தீட்டு இருக்கிறது. அனைத்துவிதமான பெண்களுக்கும் தீட்டு இருக்கிறது. அதுவும் பிராமண பெண்களோ, சூத்திரப் பெண்களோ பெண்கள் அனைவரையுமே சூத்திரர்கள் என்கிறது சனாதனம். மாதவிடாய் காரணத்தை காட்டி பெண்களை வீட்டுக்குள் அனுமதிக்காதது தீட்டு. இப்படியான ஒரு தீட்டு எந்த ஒரு மதத்திலுமே இல்லை. இப்படியான தீட்டு கொள்கைதான் சனாதனம். பிராமணர் சமூகங்களுக்கு இடையே கூட தீட்டு உண்டு.
அதேபோல அகமண முறை அதாவது ஒரே ஜாதிக்குள்தான் திருமணம் செய்ய வேண்டும் என்பது எந்த ஒரு மதத்திலும் இல்லை. பிற மதங்களில் ஆண், பெண் இடையேயான பாகுபாடு இருக்கிறது. இல்லாமல் இல்லை. ஆனால் இத்தகைய அகமண முறை என்பது ஒரே ஜாதிக்குள்தான் திருமணம் செய்ய வேண்டும் என்பது சனாதனத்தில்தான் இருக்கிறது. ஆகையால்தான் சனாதனம் என்பது சமத்துவத்துக்கு எதிரானது என்கிறோம். இவ்வாறு தொல். திருமாவளவன் பேசினார்.












Click it and Unblock the Notifications