ஒரு மணி நேரம்.. 17 பேருந்துகள்.. 600+ போலீசார்! கைது செய்யப்பட்ட தூய்மை பணியாளர்கள் எங்கே?
சென்னை: ரிப்பன் மாளிகை வெளியே குவிந்திருந்த 600க்கும் அதிகமான போலீசார் சரியாக 11.30 மணியளவில் போராட்டக்காரர்களை கைது செய்திருக்கின்றனர். ஒரு மணி நேரம் நீடித்த இந்த கைது நடவடிக்கையில் 17 பேருந்துகளில் 500க்கும் அதிகமான போராட்டக்காரர்களை கைது செய்து அழைத்து சென்றிருக்கின்றனர். தற்போது அவர்கள் எங்கே என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்கள் இருக்கின்றன. இதில் சில மண்டலங்களில் தூய்மை பணி என்பது தனியார்மயப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில் மீதமுள்ள மண்டலங்களிலும் தூய்மை பணியை தனியார்மயப்படுத்த மாநகராட்சி முடிவெடுத்திருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் தூய்மை பணியாளர்கள் சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம் அமைந்துள்ள ரிப்பன் மாளிகைக்கு வெளியே காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். 13 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். குறிப்பாக திமுக கூட்டணியில் உள்ள இடதுசாரி கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.
இதற்கிடையில் போராட்டம் அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் நடப்பதாகவும் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றமும் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த உத்தரவு பிறப்பித்த நிலையில், இன்று நள்ளிரவு சுமார் 11.30 மணியளவில் 600க்கும் அதிகமான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய தொடங்கினர். கைதாக மறுத்தவர்களை குண்டுகட்டாக தூக்கி பேருந்தில் ஏற்றினர்.
மொத்தம் 17 பேருந்துகளில் 500க்கும் அதிகமான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு சென்னையில் உள்ள பல்வேறு திருமண மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications