"உங்களுடன் துணை நிற்பேன்".. தூய்மைப் பணியாளர்களுக்கு உறுதியளித்த தவெக விஜய்
சென்னை: சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 11வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பணி பாதுகாப்பு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், இயக்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நடிகரும், தவெக தலைவருமான விஜய், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களை தன் பனையூர் அலுவலகத்திற்கு வரவழைத்து நேரில் சந்தித்து பேசியுள்ளார். தூய்மைப் பணியாளர்களின் நிலை குறித்து கவலை தெரிவித்த விஜய் கோரிக்கைகள் வெற்றி பெற உங்களுடன் துணை நிற்பேன் என உறுதியளித்ததாக போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
துப்புரவு பணியாளர்களின் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். முக்கியமாக திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள், இயக்கங்களே நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். மறுபக்கம் அரசு அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

ஆனால், பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மாறாக சேகர் பாபு போராட்டத்தில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதாக புகார் எழுந்துள்ளது. தூய்மை பணியாளர்களின் கோரிக்கையை ஏற்று, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.
தவெக சார்பிலும் தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், அவர்கள் நடிகரும், தவெக தலைவருமான விஜய் சந்தித்து பேசியுள்ளார். பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களை நேரடியாக வரவழைத்து விஜய் சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து போராட்டக் குழுவினர் கூறுகையில், போராடும் தூய்மைப் பணியாளர்களின் நிலை குறித்து விஜய் கவலை தெரிவித்தார். சட்ட ரீதியாக அனைத்து உதவிகளையும் செய்து தரப்படும். கோரிக்கைகள் வெற்றி பெற உங்களுடன் துணை நிற்பேன் என்றும் உறுதியளித்துள்ளார். நேற்று இரவு போராட்டக் களத்துக்கு விஜய் நேரடியாக வருவதாக இருந்தது. ஆனால், விஜய் நேரில் வந்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் எனந்பதால் நாங்களே அவரைச் சந்தித்தோம்.
விஜயை மட்டுமல்ல அனைத்துக் கட்சித் தலைவர்களையும் நேரடியாக சந்தித்து ஆதரவு கேட்கவுள்ளோம். விஜய் நேரில் வருவதாக தெரிவித்ததால் இன்று நாங்கள் இங்கு வந்தோம். தூய்மைப் பணியாளர்களுக்கு பலமாக இருப்போம் என்று விஜய் கூறியுள்ளார். எங்களுடைய சங்கங்களின் சார்பில் தவெகவுக்கு நன்றி தெரிவித்தோம் என்று தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications