தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் ஆரம்பிக்க பிள்ளையார்சுழி போட்ட சங்கரய்யா! 11 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினர்
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் சங்கரய்யா காலமான நிலையில் அவர் ஆற்றிய தொண்டுகள் குறித்தும் மக்கள் நல சேவைகள் குறித்தும் இங்கே பார்க்கலாம்.
1938 ஆம் ஆண்டு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சங்கரய்யா, அப்போதைய முதல்வர் ராஜாஜி கொண்டு வந்த கட்டாய இந்தி கல்வியை எதிர்த்து கருப்பு கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டு கல்லூரி மாணவராக இருந்த போதே கைது செய்யப்பட்டார். மேலும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வைத்தியநாத ஐயர், முத்துராமலிங்கத் தேவர் தலைமையில் ஆலய நுழைவு போராட்டம் நடைபெற்ற போது அந்த போராட்டத்திற்கு ஆதரவளித்து மாணவர் படையை திரட்டி கொண்டு சென்றவர் சங்கரய்யா.

தொடர்ந்து போராட்டங்களில் பங்கேற்று வகுப்புகளை புறக்கணித்ததால், தேர்வுவெழுத முடியாமல், பட்டப்படிப்பை தொடர முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டவர் சங்கரய்யா. ஆனால் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் சமூக களப் போராளியாக மாறினார்.
ஒரு பக்கம் சுதந்திரப் போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட சங்கரய்யா, மற்றொரு பக்கம் கிராமப்புறங்களில் பண்ணையார்களால் சுரண்டப்பட்ட விவசாய தொழிலாளிகள், பட்டியலின மக்களின் உரிமைகளுக்காக ஓங்கி குரல் கொடுத்தவர். தமிழக சட்டமன்றத்தில் 1967, 1977,மற்றும் 1980 ஆகிய காலகட்டங்களில் சட்டமன்ற உறுப்பினராக 11 ஆண்டுகள் பணியாற்றி தமிழக மக்களின் யதார்த்த நிலையை சட்டமன்றத்தில் எடுத்துரைத்தவர்.
மக்கள் நலன் சார்ந்த எண்ணற்ற பிரச்சனைகளுக்கு சட்டசபை பேச்சின் மூலம் தீர்வுகளை பெற்றுக் கொடுத்தவர் தோழர் சங்கரய்யா. தமிழகத்தில் பொது விநியோகத் திட்டம்(ரேஷன் கடைகள்) உருவாக முதல் குரல் கொடுத்தவர் தோழர் சக்கரய்யா என்பது குறிப்பிடத்தக்கது. தன் அரசியல் பொதுவாழ்வில் ஏராளமான சாதி மறுப்பு மற்றும் சீர்த்திருத்த திருமணங்களை நடத்தி வைத்த பெருமைக்குரியவர் சங்கரய்யா. அதேபோல் தானும் சாதி மறுப்பு திருமணம் செய்ததோடு தனது வாரிசுகளுக்கும் சாதி மறுப்பு திருமணங்களை செய்து வைத்து சமூக நல்லிணக்கத்திற்கு உதாரணமாக திகழ்ந்தவர் தோழர் சங்கரய்யா.












Click it and Unblock the Notifications