ஜீவஜோதியின் அழகு.. சபலத்தால் சரிந்த சாப்பாட்டு சாம்ராஜ்ஜியம்.. ராஜகோபால் கவிழ்ந்த கதை!
சரவணபவன் அண்ணாச்சி சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது
Recommended Video
சென்னை: பணம், பேர், புகழ், செல்வாக்கு, அந்தஸ்துடன் சொகுசாக வாழ்ந்த சரவணபவன் ராஜகோபால் இப்போது சிறையில் அடைக்கப்படுகிறார்.
அண்ணாச்சி என்று அழைக்கப்படும் ராஜகோபால் என்பவர் யார்.. அளவுக்கு அதிகமாக ஆசைப்படற ஆம்பிளை நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை என்ற வசனத்துக்கு எடுத்துக்காட்டுதான் இந்த அண்ணாச்சி!
அடிமட்டத்தில் இருந்து மேலே வந்தவர். ஆனால் ஜோதிடத்தில் அதீத நம்பிக்கை உடையவர். 2 மனைவிகள் இருந்தனர். குடும்பத்தில் குட்டி குட்டி குழப்பங்களும், சின்ன சின்ன சிக்கல்களும் வந்து கொண்டே இருந்தன. அந்த பிரச்சனைகளுக்காகவும், தொழில் வளர்ச்சிக்காகவும் குடும்ப ஜோசியரை போய் சந்தித்தார் அண்ணாச்சி.
பேராசை
அந்த ஜோசியரோ, "நீங்கள் இளம்பெண்ணை 3-வதாக கல்யாணம் செய்தால், உங்கள் ஓட்டல் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. வானளாவிய பணக்காரனாகி விடலாம். பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும்" என்று ஜோசியக்காரர் சொல்லி உள்ளார். அப்போதே அண்ணாச்சிக்கு வயசு 50-க்கு மேல் ஆகிவிட்டது. இளம்பெண்ணை யார் முன்வந்து கட்டி கொடுப்பார்களோ தெரியாது, இருந்தாலும் பலஇடங்களில் தேடியும் பார்த்தார்.
ஜீவஜோதி
இந்த சமயத்தில் அண்ணாச்சி கண்ணில் பட்டுவிட்டார் ஜீவஜோதி. தன் ஓட்டலில் வேலை பார்த்த அசிஸ்டென்ட் மேனேஜரின் மகள்தான் ஜீவஜோதி. மாநிறம்தான்.. களையான முகம்.. பெரிய அளவில் கவர்ச்சிகரமான கண்கள்.. நல்லபடிப்பு.. சாந்தமான குணம்.. லட்சணமான தோற்றம்.. இவர்தான் ஜீவஜோதி!
பிடித்தம்
ஜீவஜோதியின் அழகில் மயங்கினார் அண்ணாச்சி. அப்போதுதான் ஜீவஜோதியின் ஜாதகத்தை ஜோசியரிடம் அண்ணாச்சி கொடுக்க, ஜாதகமும் செம பொருத்தம் என்று அண்ணாச்சியிடம் ஜோசியர் சொல்லவும், ஜீவஜோதி மீது பிடித்தம் அதிகமானது.
சம்மதம்
மேனேஜரிடமே பெண் கேட்டார். மகளை கட்டிக் கொடுக்க விரும்பவில்லை. பணத்தாசை காட்டினார், சில சொத்துக்களை தருவதாகவும் அண்ணாச்சி சொன்னார். அப்போதும் தகப்பன் மசியவில்லை. தொடர் முயற்சியில் இறுதியில் அண்ணாச்சிக்கே வெற்றி. பெண்ணை கட்டி தர சம்மதம் சொன்னார். ஆனால் ஜீவஜோதி, பிரின்ஸ் சாந்தகுமாரை லவ் பண்ணி கொண்டிருந்தார். இது தெரிந்தும், மகளை வற்புறுத்தினார் அப்பா. உறுதியான காதல்முன் அப்பாவின் பேச்சு எடுபடவில்லை.
கடத்தல்
பிரின்சுடன் கல்யாணம் ஆனது. அப்போதும் அண்ணாச்சிக்கு ஜீவஜோதியை விட மனசில்லை. மாப்பிள்ளையை தனியாக அழைத்து, மனைவியை தன்னிடம் தந்துவிடுமாறு கேட்டார். ஆத்திரப்பட்ட பிரின்ஸ், அண்ணாச்சியின் பணிவு + மிரட்டல் பேச்சுக்கு சம்மதிக்கவே இல்லை. விளைவு.. பணம்தான் குவிந்து கிடக்கிறதே, எதையும் செய்யலாம் என்கிற துணிச்சல்தான் பிரின்ஸை கடத்தி கொண்டு போக வைத்தது.
பிணம்
காரில் செல்லும்போதே சாந்தகுமார் கழுத்து நெறிக்கப்பட்டது.. கொடைக்கானல் மலை உச்சிக்கு செல்வதற்குள் பல சித்ரவதைகள் வந்து போயின.. அப்போதே பாதி உயிர் போயிற்று.. இறுதியாக உச்சியில் இருந்து தூக்கி வீசப்பட்டார் சாந்தகுமார். 5 நாள் கழித்து மலையடிவாரத்தில் பிணத்தை கைப்பற்றும் நிலை வந்தது. அண்ணாச்சியின் சுயரூபம் வெளி உலகத்துக்கு தெரியவந்தது.
உணர்வுகள்
ஆரம்ப காலத்தில், அடிமட்டத்திலிருந்து பிரமிக்கத்தக்க வளர்ச்சிதான் அண்ணாச்சி ராஜகோபாலின் வளர்ச்சியும். பணம் கொட்டி கிடந்தால் என்ன, செல்வாக்கு குவிந்து கிடந்தால் என்ன, உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தெரியாமல் மொத்த வாழ்க்கையையும் சபலத்தாலும், பேராசையாலும் தொலைத்தே விட்டார். மண்ணாசை, பெண்ணாசை இரண்டுமே மனிதனை மானம் மரியாதை இழக்க வைத்து முடிவில் அவனையே அழித்துவிடும் என்பதற்கு அண்ணாச்சிதான் சிறந்த உதாரணம்!