பாஜகவில் இணைகிறார் ஜீவஜோதி... அழைப்புவிடுத்த வானதி சீனிவாசன்
சென்னை: சரவண பவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபாலுக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்தி வெற்றிக்கண்ட ஜீவஜோதி வரும் வாரத்தில் பாஜகவில் ஐக்கியமாக உள்ளார்.
அதற்கான பேச்சுவார்த்தைகள் பாஜக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் முன்னிலையில் அண்மையில் நடைபெற்றுள்ளன.
ஜீவஜோதியை சந்தித்த வானதி, உங்களை போன்ற தைரியமான பெண்கள் பாஜகவில் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்ததை ஜீவஜோதியும் முழுமனதுடன் ஏற்றுக்கொண்டார்.

சரவணபவன்
சரவண பவன் ஹோட்டலில் 90 காலகட்டத்தில் மேலாளராக பணியாற்றியவர் ராமசாமி. அவரது மகள் ஜீவஜோதியை ஜோசியர் கூறியதற்காக மூன்றாவதாக திருமணம் செய்ய முயற்சித்தார் ராஜகோபால். ஆனால், ஜீவஜோதியோ தனது காதலர் பிரின்ஸ் சாந்தகுமாரை மணந்துகொண்டார். இதையடுத்து பிரின்ஸ் சாந்தகுமார் கொடைக்கானலில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். அதற்கு காரணம் சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் தான் எனக் கூறி ஜீவஜோதி 20 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்போராட்டம் மேற்கொண்டார்.

சிறைத்தண்டனை
உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என தாம் மேற்கொண்ட சட்டப்போராட்டங்களில் வெற்றிபெற்ற ஜீவஜோதி ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுக்கொடுத்தார். இதன் மூலம் தமிழக அளவில் பரிச்சயமான நபராக மாறினார் ஜீவஜோதி. இந்நிலையில் இப்போது மறுமணம் செய்துகொண்டு கணவர் மற்றும் தாயாருடன் தஞ்சையில் உணவகம் நடத்தி வருகிறார்.

பேச்சுவார்த்தை
ஜீவஜோதியை பாஜகவில் இணையுமாறு முத்துப்பேட்டையை சேர்ந்த கருப்பு முருகானந்தம் அழைத்துள்ளார். அவரும் அதனை தட்டாமல் யோசனையில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் பாஜக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனை சந்தித்து பேசிய ஜீவஜோதி பல்வேறு விவகாரங்கள் பற்றி மனம் விட்டு பேசியுள்ளார்.

அழைப்பு
ஜீவஜோதிக்கு ஆறுதல் கூறிய வானதி சீனிவாசன், உங்களை போன்ற போராட்டக் குணம் மிக்க பெண்கள் பாஜகவில் இணைய வேண்டும் எனக் கூறியுள்ளார். ஆகையால், விரைவில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா முன்னிலையிலோ அல்லது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையிலோ ஜீவஜோதி பாஜகவில் இணையவுள்ளார்.












Click it and Unblock the Notifications