"நீங்க வந்தா மட்டும் போதும்".. மோடிக்கு வெத்தலை பாக்கு வைத்து அழைத்த திமுக வேட்பாளர்கள்.. குசும்பு!
சென்னை: பிரதமர் மோடி எங்கள் தொகுதிக்கு வந்து அதிமுக கூட்டணி சார்பாக பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று திமுக வேட்பாளர்கள் கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளனர். பிரதமர் மோடியை கிண்டல் செய்யும் விதமாக திமுக தலைவர்கள் இப்படி அழைப்பு விடுத்து உள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். 2 வாரம் முன் தாராபுரம் வந்த பிரதமர் மோடி அங்கு பாஜக தமிழக தலைவர் எல். முருகனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.
இந்த நிலையில் இன்று மதுரை பாண்டி கோவில் பகுதியில் நடைபெற்ற அதிமுக கூட்டணி கட்சி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். திமுகவை கடுமையாக விமர்சனம் செய்யும் வகையில் பிரதமர் மோடி குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

குசும்பு
தமிழகத்தில் எப்படியாவது தாமரையை மலர வைத்துவிட வேண்டும் என்று பிரதமர் மோடி தீவிரமாக செயல்பட்டு பிரச்சாரம் செய்கிறார். ஆனால் திமுகவோ... பிரதமர் மோடி வருகிறார்.. தேர்தல் களம் இதனால் மாறிவிடும்.. பாஜகவிற்கு ஆதரவு பெருகும் என்றெல்லாம் கவலைப்படாமல் பாஜக கூட்டங்களை ஜாலியாக கிண்டல் செய்து வருகிறது. பிரதமர் மோடியின் வருகையால் அதிமுகவுக்குத்தான் தோல்வி என்று திமுகவினர் இணையத்தில் கிண்டல் செய்து வருகிறார்கள்.

வாய்ப்பு
எதுவும் செய்யாமல் இருந்தாலே அதிமுகவிற்கு கொஞ்சம் வாக்குகள் கிடைக்கும். மோடி வந்து பிரச்சாரம் செய்தால் இருக்கிற வாக்குகளும் காலியாகிவிடும் என்று திமுகவினர் இணையத்தில் கிண்டல் செய்கிறார்கள். மோடிவந்து பிரச்சாரம் செய்தால் அதிமுக ஜெயிக்காது.. லோக்சபா தேர்தல் நியாபகம் இருக்கா? என்று திமுகவினர் இணையத்தில் கிண்டலடிக்கிறார்கள்.

லோக்சபா
அதோடு தமிழக பாஜகவினர் மோடியை முன்னிறுத்துவதற்கு பதிலாக ஜெயலலிதா, எம்.ஜி.ஆரை முன்னிறுத்துவதையும் திமுகவினர் குறிப்பிட்டு உள்ளனர். இந்த விஷயம் தெரிந்துதான் மோடியை பாஜகவே முன்னிறுத்தவில்லை என்று திமுகவினர் கூறுகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில்தான் எங்கள் தொகுதிக்கு பிரதமர் மோடி வந்து அதிமுக கூட்டணி சார்பாக பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று திமுக வேட்பாளர்கள் கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளனர்.

வாங்க
எங்கள் தொகுதியில் மோடி வந்து பிரச்சாரம் செய்ய வேண்டும்.. அப்போதுதான் திமுக எளிதாக வெல்லும். திமுகவை எதிர்த்து போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மோடி பிரச்சாரம் செய்ய வேண்டும். அப்படி செய்தால் எங்களின் வெற்றி எளிதாகிவிடும் என்று திமுக வேட்பாளர்கள், எம்பிக்கள் கூறியுள்ளனர்.

டிவிட்
மோடியை பிரச்சாரம் செய்ய வரும்படி திமுகவின் எம்பி செந்தில் குமார், வேட்பாளர்கள் அனிதா ராதாகிருஷ்னன், ஆர். காந்தி, பி சுப்பிரமணி, எஸ் . ஆர் ராஜா, ஆர். ராஜகண்ணப்பன், தங்கம் தென்னரசு என்று பலர் அழைப்பு விடுத்துள்ளனர் . நீங்கள் வந்து அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக பேசினால் மட்டும் போதும்.. மத்த விஷயத்தை மக்கள் பார்த்துக்கொள்வார்கள் .. நாங்கள் எளிதாக வெற்றிபெற்றுவிடுவோம் என்று திமுக வேட்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வடமாநிலம்
தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதிதான் இந்த டிரெண்டை தொடங்கி வைத்தது. வடமாநிலங்களில் பிரதமர் மோடி வந்து பிரச்சாரம் செய்தால் போதும் பாஜக வெற்றி என்று நம்பிக்கையாக உள்ளது . ஆனால் தமிழகத்தில் திமுகவோ அதை உடைக்கும் வகையில் கோ பேக் மோடிக்கு பதிலாக கம் பேக் மோடி என்று கூறி கிண்டல் செய்து வருகிறது!












Click it and Unblock the Notifications