படுதோல்வி: கவலைப்படாதீங்க.. நான் அதை செய்து முடிப்பேன்.. அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா சொன்ன சேதி!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவின் தோல்வியைத் தொடர்ந்து களத்தில் இறங்கியுள்ளார் சசிகலா.
சென்னை : "அதிமுக தொண்டர்கள் அனைவரும் இந்த தோல்வியைக் கண்டு துவண்டு விடாமல், நம்பிக்கையோடு இருங்கள். விரைவில் அனைத்திற்கும் ஒரு நல்ல தீர்வு ஏற்படும். நான் அதை கண்டிப்பாக செய்து முடிப்பேன்." என சசிகலா தெரிவித்துள்ளார்.
அனைவரும் ஒன்றிணைந்து ஒரு வலிமையான இயக்கமாக இந்த இடைத்தேர்தலை சந்தித்து இருந்தால் கழகம் இன்றைக்கு வெற்றி பெற்று இருக்கும் என்றும் சசிகலா தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மிகப்பெரிய வித்தியாசத்தில் அதிமுக தோல்வியடைந்துள்ள சூழலில், ஓபிஎஸ், சசிகலா ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ஈரோடு இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈவெரா மரணம் அடைந்ததையொட்டி அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அதிமுக சார்பில் களமிறங்குவதாக ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் அறிவித்திருந்தனர். பின்னர் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக ஓபிஎஸ் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இரட்டை இலை சின்னத்தில் தென்னரசுவை வேட்பாளராக நிறுத்தினார் எடப்பாடி பழனிசாமி. இரட்டை இலையில் நிற்கும் வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய தயார் என்றும் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். ஆனால், ஓபிஎஸ் தரப்பு கொடுத்த நட்சத்திர வேட்பாளர் பட்டியல் ஏற்கப்படவில்லை. ஓபிஎஸ் உள்ளிட்ட அவரது அணியினர் யாருமே பிரச்சாரம் செய்யவில்லை.

பலம் நிரூபிக்கும் களம்
அதேசமயம், ஈபிஎஸ் அணியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சர்கள் பட்டாளத்தையே தேர்தல் களப்பணியில் இறக்கினார் ஈபிஎஸ். ஈரோடு கிழக்கு தொகுதியில் எடப்பாடி பழனிசாமி 5 நாட்கள் தங்கி இருந்து வீதி வீதியாகப் பிரசாரம் செய்தார். ஓபிஎஸ் உடனான மோதலைத் தொடர்ந்து, தங்கள் பலத்தை நிரூபிக்கும் களமாகக் கருதி ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவினர் பிரசாரம் செய்தனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் ஈரோடு கிழக்கில் தென்னரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.

கடும் பின்னடைவு
இந்நிலையில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கையில் முதல் சுற்றில் இருந்தே திமுக கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னிலையில் இருந்தார். அதிமுக வேட்பாளர் தென்னரசு முதல் சுற்றிலேயே கடும் பின்னடைவை சந்தித்தார். வாக்கு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 1,10,556 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,981 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். இருவருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 66,575.

எடப்பாடிக்கு அதிர்ச்சி
கடந்த 2021 பொதுத் தேர்தலில் ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெராவுக்கும் தமாகா வேட்பாளர் யுவராஜாவுக்கும் இடையேயான வித்தியாசம் 8 ஆயிரம் தான். இந்த முறை அது பலமடங்கு அதிகரித்துள்ளது. அதிமுக வேட்பாளர் படுதோல்வியால் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதேசமயம் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்ட இந்த தோல்வியால் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா ஆதரவாளர்கள் உள்ளூர உற்சாகம் அடைந்துள்ளனர். தொடர் தோல்வியைச் சந்தித்து வரும் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்ஸை ஏற்றுக்கொண்டு அவருடன் இணைந்து செயல்பட்டு அதிமுகவை காக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

சசிகலா பரபர அறிக்கை
இந்நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் முடிவு குறித்து வி.கே.சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற கதையாக அதிமுக இன்று இருக்கும் நிலைமையைப் பயன்படுத்திக் கொண்டு திமுக அதில் குளிர்காய்வதால் பெற்ற வெற்றியாகத்தான் பார்க்க முடிகிறது. பிரிந்து கிடக்கும் அனைவரும் ஒன்றாக வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். தமிழ்நாட்டு மக்களும் இந்த இயக்கம் ஒன்றுபட வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள்.

இணைந்து சந்தித்திருந்தால்
அனைவரும் ஒன்றிணைந்து ஒரு வலிமையான இயக்கமாக இந்த இடைத்தேர்தலை சந்தித்து இருந்தால் கழகம் இன்றைக்கு வெற்றி பெற்று இருக்கும். எனவே, தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்துக்கிணங்க ஒட்டுமொத்த கழக தொண்டர்கள் எதிர்பார்க்கின்ற ஒரு வலிமையான, ஒருங்கிணைந்த அதிமுகவை அமைத்து, வரும் நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெறுவோம்.

நான் செய்து முடிப்பேன்
தமிழ்நாட்டு மக்களின் பேராதரவோடு நம் தலைவர்கள் கொடுத்த அதே பொற்கால ஆட்சியை விரைவில் அமைப்போம். இது உறுதி. எனவே அதிமுக தொண்டர்கள் அனைவரும் இந்த தோல்வியைக் கண்டு துவண்டு விடாமல், நம்பிக்கையோடு இருங்கள். விரைவில் அனைத்திற்கும் ஒரு நல்ல தீர்வு ஏற்படும். நான் அதை கண்டிப்பாக செய்து முடிப்பேன். நாளை நமதே " எனத் தெரிவித்துள்ளார். சசிகலாவின் இந்த அறிக்கை அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
அதிமுக தொகுதி பங்கீடு எல்லாம் ஓகேதான்! ஆனா.. ஜி.கே.வாசன் மிஸ்ஸிங்! கவனிச்சிங்களா! -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது? -
கடைசி நேரத்தில் ‘ட்விஸ்ட்’.. கூட்டணி கட்சியான NR காங்கிரஸில் இணைந்த புதுச்சேரி அதிமுக மாநில நிர்வாகி -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி.. புதுச்சேரியில் 2 தொகுதிகளில் யார் யார்?












Click it and Unblock the Notifications