ஜெ.வுடன் எனது பிறந்தநாளை கொண்டாடினேன்.. இப்போ அந்த ஆசைலாம் வரதே இல்லை.. ஆடியோவில் சசிகலா உருக்கம்
சென்னை: ஜெயலலிதாவுடன் எனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளேன். ஆனால் தற்போது அந்த ஆசையே எனக்கு வருவதில்லை என சசிகலா தொண்டரிடம் பேசும் ஆடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற சசிகலா கடந்த பிப்ரவரி மாதம் விடுதலையானார். இதையடுத்து அதிமுகவை மீட்டெடுக்க தனது முயற்சிகளை தொடர்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் அவர் தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்னர் அரசியலிலிருந்து விலகுகிறேன் என அறிவித்திருந்தார். மேலும் தன்னால் அதிமுக ஆட்சி மீண்டும் அமையாமல் போகக் கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுத்துள்ளதாகவும் அவர் அறிவித்தார்.

அதிமுக தோல்வி
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்து ஆட்சியை இழந்தது. அதிமுகவிலும் கோஷ்டி அரசியல் எதிரொலிப்பதாக புகார்கள் வந்தன. இதையடுத்து கடந்த சில மாதங்களாக சில அதிமுக தொண்டர்கள் மற்றும் அமமுக தொண்டர்களுடன் சசிகலா பேசி வருகிறார்கள். அதில் விரைவில் அதிமுகவை கைப்பற்றுவேன் என சொல்லி வருகிறார்.

ஜெயலலிதா சமாதி
கொரோனா ஊரடங்கு முடிந்தவுடன் ஜெயலலிதா சமாதிக்கு சென்று ஆசி பெற்றுவிட்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன் என தெரிவித்திருந்தார். எனினும் அவர் அதிமுகவை கைப்பற்ற எந்த செயல்பாட்டையும் முன்னெடுக்கவில்லை. எம்ஜிஆரே தன்னிடம் ஆலோசனைகளை கேட்பார் என சசிகலா தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை அதிமுகவினர் வன்மையாக கண்டித்தனர். இறந்தவர்கள் வந்து மறுக்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் சசிகலா பொய் சொல்வதாகவும் விட்டால் அண்ணாவே என்னிடம் ஆலோசனை கேட்டார் என சசிகலா சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் அதிமுகவினர் கண்டித்தனர்.

கட்சியிலிருந்து ஜெயலலிதா நீக்கியது
மேலும் கடந்த மாதம் தனியார் தொலைகாட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் தன்னை கட்சியிலிருந்து ஜெயலலிதா நீக்கியது இருவரும் போட்ட நாடகம் என கூறி ஜெயலலிதாவுடன் துன்பமான கால கட்டங்களில் தான் உறுதுணையாக இருந்ததாக தெரிவித்திருந்தார். மேலும் அதிமுகவை கைப்பற்றுவேன் என்றும் தெரிவித்திருந்தார். மேலும் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரை நேரில் சந்தித்து குடும்பத்தினரிடம் நலம் விசாரித்தார். அதிமுகவின் மூத்த தலைவர் மதுசூதனன் என்பதாலும் இதுவரை எந்த கட்சிக்கும் தாவாமல் அதிமுகவுக்கே சேவை செய்ததாகவும் சசிகலா தரப்பு விளக்கமளித்தது. இவர் மருத்துவமனைக்கு சென்ற போது உள்ளே எடப்பாடி பழனிச்சாமி இருந்தார். அவர் வெளியே வரும் வரை காரில் காத்திருந்த சசிகலா, அவர் வெளியே வந்தபின்னர் உள்ளே சென்றார். இதையடுத்து மதுசூதனன் மறைந்த போதும் சசிகலா அதிமுக கொடி பொருத்திய காரில் போய் அஞ்சலி செலுத்திவிட்டு வந்தார். அது போல் இரங்கல் செய்தியும் வெளியிட்டிருந்தார்.

தொண்டர்கள் வாழ்த்து
இந்த நிலையில் இன்றைய தினம் அவருக்கு பிறந்தநாள் ஆகும். இதையொட்டி தொண்டர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் அவர் இன்றைய தினம் ஒரு தொண்டருடன் தொலைபேசியில் உரையாடினார். தூத்துக்குடியை சேர்ந்த ரூபம் வேலவன் என்ற தொண்டருடன் சசிகலா பேசினார்.

கொரோனா காலம்
அவர் உங்கள் பிறந்தநாளில் உங்களை சந்திக்க நினைத்தோம். ஆனால் முடியவில்லை என்றார். அதற்கு சசிகலா தற்போது கொரோனா காலம் என்பதால் உங்கள் பகுதிகளிலேயே ஏதாவது பூஜை செய்யுங்கள். ஏழை மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கி உதவுங்கள். எனக்காக மட்டுமல்ல அனைத்து மக்களுக்காகவும் கடவுளை வேண்டி கொள்ளுங்கள். அதுவே எனக்கு பெரிய மகிழ்ச்சியாக அமையும்.

துணையாக ஜெயலலிதா
தொண்டர்களைத்தான் எனக்கு துணையாக ஜெயலலிதா விட்டு சென்றிருக்கிறார். எனவே நல்லதாகவே நடக்கும். இதுவரை என் பிறந்தநாளை ஜெயலலிதாவுடன்தான் கொண்டாடியுள்ளேன். எனவேதான் இப்போதுதெல்லாம் பிறந்தநாளை கொண்டாடவே ஆசை வருவதில்லை. ஆகவே தனது பிறந்தநாளை கொண்டாட விரும்பும் தொண்டர்கள் ஏழை மக்களுக்கு உதவிகள் புரிந்து கொண்டாடுங்கள்.

ஊரடங்கை மதிக்க வேண்டும்
இப்போதுள்ள நிலையில் ஊரடங்கை மதிக்க வேண்டும். கொரோனா பாதிப்பு குறைந்து மக்கள் வாழ்க்கை நல்ல நிலைக்கு வர வேண்டும். அதுதான் எனக்கு முக்கியம். கொரோனா பாதிப்பு குறைந்ததும் தொண்டர்களை சந்திக்க வருவேன். அதிமுகவின் 3ஆவது தலைமுறை தலைவராக நான் வர வேண்டும் என தொண்டர்கள் விரும்புகிறார்கள். அவர்கள் விருப்பமே எனது விருப்பம். அவர்கள் சந்தோஷமே எனது சந்தோஷம் என சசிகலா தெரிவித்துள்ளார்.

சசிகலா அதிமுகவை கைப்பற்ற செயல்படுத்துவாரா
சசிகலா உண்மையில் அதிமுகவை கைப்பற்ற செயல்படுத்துவாரா இல்லை தொண்டர்களை உற்சாகப்படுத்தவும் அவர் இவ்வாறு பேசுகிறாரா என தெரியவில்லை. ஆனால் சசிகலா ஆதரவாளர்களோ நிச்சயம் அவர் வீடியோவில் தோன்றி பேசுவார் என்கிறார்கள். மேலும் ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெளியிடவும் சசிகலா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இன்றைய தினம் பிறந்தநாள் அன்று அந்த வீடியோ அஸ்திரத்தை வெளியே விடுவார் என எதிர்பார்த்திருந்த நிலையில் ஏமாற்றமடைந்துள்ளனர். ஜெயலலிதா சமாதிக்கு செல்வேன் என நீண்ட காலமாக சொல்லி வரும் சசிகலா அவ்வாறு சமாதிக்கு சென்றுவிட்டு தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என கூறுகிறார்கள். அவ்வாறு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர் தொண்டர்களின் ஆதரவை ஆழம் பார்த்துவிட்டு பின்னர் அதிமுகவை கைப்பற்றும் செயல்பாடுகளில் இறங்குவார் என அரசியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். அதிமுகவில் இரு தலைமையிடையே பனிப்போர் குறித்தும் சசிகலா ஒரு தொண்டரிடம் வேதனை தெரிவித்திருந்தார். அது போல் தான் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக தேர்வு செய்தேன் என்பதும் குறித்தும் ஓபிஎஸ்ஸை பதவி விலகுமாறுதான் கூறவில்லை என்றும் சசிகலா தெளிவுப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications