திருமகன் ஈவெரா மறைவு- இரங்கலில் சசிகலா குறிப்பிட்ட அந்த ஒரு முக்கியமான பெயர்-ஓபிஎஸ், இபிஎஸ் சொல்லலை!
சென்னை: மூத்த அரசியல் தலைவரான முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான திருமகன் ஈவெரா மறைவுக்கு சசிகலா, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக இபிஎஸ் கோஷ்டி இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா அவர்களின் திடீர் மறைவுச் செய்தி மிகுந்த மன வருத்தத்தை அளித்தது. பாரம்பரிய மிக்க அரசியல் குடும்பத்தில் மக்கள் பணி ஆற்றிக் கொண்டிருந்த, இளம் சேவகர், மக்கள் தொண்டர் மறைவு பேரிழப்பாகும்.அன்னாரின் ஆன்மா அமைதி பெற இறைவனை வேண்டுகிறேன். அவரின் தந்தையார் திரு @EVKSElangovan அவர்களுக்கு, @INCTamilNadu தொண்டர்களுக்கு மற்றும் அவரது குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிமுக பொதுச்செயலாளராக உரிமை கோரும் சசிகலா: புரட்சித்தலைவர் காலம்முதல் தனது இறுதிமூச்சுவரைதொடர்ந்து இயக்கத்தில் பயணித்த,மறைந்த கழகமுன்னோடி ஈ.வெ.கி.சுலோச்சனாசம்பத் அவர்களின்பேரனும்,திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களின் மகனும்,ஈரோடுகிழக்குசட்டமன்ற உறுப்பினருமான திருமகன் ஈவெராஅவர்கள் திடீரென்று உயிரிழந்தது வருத்தமளிக்கிறது. தனது மகனை இழந்து வாடும் திரு.ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
அதிமுக இபிஎஸ் கோஷ்டி இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினரும்,முன்னாள் மத்திய அமைச்சர்,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திரு.E.V.K.S இளங்கோவன் அவர்களது மகனுமாகிய திருமகன் ஈவெரா அவர்கள் உடல்நலக் குறைவால் இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயருற்றேன். மகனை இழந்து வாடும் திரு. @EVKSElangovan அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், சட்டமன்ற உறுப்பினர் திரு.திருமகன் ஈவெரா அவர்களது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், எனது நண்பர் திரு. ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களின் மகனுமான திரு. ஈவெரா இ.திருமகன் அவர்கள் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார் என்ற செய்தி மிகுந்த பேரதிர்ச்சியை அளித்துள்ளது. திரு.திருமகன் அவர்கனை இழந்து வாடும் அவரது தந்தை திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஈவெகி சுலோச்சனா சம்பத்தின் பேரன் திருமகன் ஈவெரா, என்பதை பொதுவாக யாரும் இரங்கல் செய்தியில் குறிப்பிடவில்லை. ஆனால் சசிகலா மட்டும் மறக்காமல் ஈவெகி சுலோச்சனா சம்பத் பெயரை குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.