கார் நிறைய டெய்ரி மில்க் சாக்லேட்ஸ்... பழைய நினைவுகள் ரீ வைண்ட்... மீண்டும் ஜெ.பாணியில் சசிகலா..!
சென்னை: கடந்த 4 நாட்களாகவே சுற்றுப்பயணத்தில் இருக்கும் சசிகலா, தனது கார் நிறைய டெய்ரி மில்க் சாக்லேட்ஸ்களை வைத்துக்கொண்டு வழியில் சந்திக்கும் குழந்தைகளுக்கும், சிறுவர், சிறுமிகளுக்கும் பரிசு கொடுத்து வருகிறார்.
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவரும் இதே போல் தான் வெளியூர் சுற்றுப்பயணத்தில் குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்து மகிழ்வார்.
தஞ்சையிலிருந்து மதுரைக்கு நேற்று காரில் பயணித்த அவர், விராலிமலை, துவரங்குறிச்சி என ஒவ்வொரு இடம் வரும் போதும் தனது பழைய நினைவுகளை விவேக் ஜெயராமனிடம் ரீவைண்ட் செய்தபடியே சென்றிருக்கிறார்.

26-ம் தேதி சென்னை
தஞ்சையில் கடந்த 27-ம் தேதி நடைபெற்ற டிடிவி தினகரன் மகள் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்பதற்காக 26-ம் தேதி காலை சென்னையிலிருந்து புறப்பட்டார் சசிகலா. அன்று தொடங்கிய அவரது சுற்றுப்பயணம் 4-வது நாளாக இன்றும் தொடர்கிறது. அவருடன் இளவசரசியும், அவரது மகன் விவேக் ஜெயராமனும் உடன் பயணிக்கிறார்கள். ஜெயலலிதாவுடன் தாம் பிரச்சார டூர் சென்ற போது நடந்து நிகழ்வுகள், முக்கிய ஊர்களை கடக்கும் போது அந்த ஊரின் முன்னாள் கட்சிப் பிரமுகர்கள் குறித்தெல்லாம் சசிகலா பழைய நினைவுகளை அசைபோட்டிருக்கிறார்.

சாக்லேட்ஸ்
மேலும், ஜெயலலிதா பாணியில் வழியில் சந்திக்கும் சிறுவர், சிறுமிகளுக்காக, தனது கார் நிறைய டெய்ரி மில்க் சாக்லேட்களை வாங்கி குவித்து வைத்திருக்கிறார் சசிகலா. தன்னை ஆவலுடன் சந்திக்க காத்திருக்கும் அவர்கள் கைகளில் சாக்லேட் பாக்கெட்டை கொடுத்து மகிழ்கிறார். கடந்த 4 நாட்களாக தான் இந்த நடைமுறையை அவர் பின்பற்றத் தொடங்கியிருக்கிறார். இதற்கு முன்னதாக இது போன்று அவர் செய்ததாக தெரியவில்லை.

வேடிக்கை
அதேபோல் பயணத்தின் போது கண் அயர விரும்பாத சசிகலா வேடிக்கை பார்த்தபடியே செல்வதை விரும்புகிறார். மேலும், தன்னை வரவேற்பதற்கு ஒரு இடத்தில் 5 பேர் நின்றாலும் கூட காரை நிறுத்துமாறு ஓட்டுநரிடம் கூறி அவர்களை சந்தித்துவிட்டுத் தான் புறப்படுகிறார் சசிகலா. அப்படித்தான் நேற்று தஞ்சையிலிருந்து மதுரை செல்லும் வழியில் பல இடங்களில் காரை நிறுத்தி ஆதரவாளர்களை சந்தித்து அவர்கள் அளித்த வரவேற்பை ஏற்றிருக்கிறார். சசிகலாவிடம் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றம் அவரது ஆதரவாளர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

டூவிலர்கள்
இதனிடையே இன்று காலை மதுரையிலிருந்து பசும்பொன் நோக்கி சென்ற சசிகலாவின் வேனை பின் தொடர்ந்து நூற்றுக்கணக்கான டூவிலர்களில் இளைஞர்கள் சென்றது கவனிக்கத்தக்கது. சசிகலாவுக்கு இளைஞர்கள் ஆதரவும் இருக்கிறது என்பதை இந்த நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது.












Click it and Unblock the Notifications