’வினை தீர்க்கும் ஆனைமுகன்’ சசிகலா விநாயகர் சதுர்த்தி வாழ்த்து! அதிலும் எடப்பாடிக்கு குடைச்சல் தான்!
சென்னை : முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் தோழி சசிகலா வெளியிட்டுள்ள விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அறிக்கையில் அதிமுக பொதுச்செயலாளர் என்றே குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி விழாவானது வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட இருக்கும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விநாயகர் சிலைகள் விற்பனை, பூஜை பொருட்கள் விற்பனை என களைகட்டி வரும் நிலையில், தலைவர்கள் பலரும் பொது மக்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் என சசிகலாவும் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருக்கிறார்.

சசிகலா அறிக்கை
அதில்,"வினை தீர்க்கும் ஆனைமுகன், முழு முதற் கடவுள் விநாயகப் பெருமான் அவதரித்த திருநாளான விநாயகர் சதுர்த்தி திருநாளை, மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும், எனது இதயம் கனிந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.எந்த ஒரு செயலை தொடங்கினாலும், அதை வெற்றியுடன் செய்து முடிக்க முதலில் விநாயகப் பெருமானை வணங்கிவிட்டு ஆரம்பிக்கும்போது அந்த செயல் கண்டிப்பாக வெற்றியடையும் என்ற நம்பிக்கையோடு அனைவரும் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுகின்றனர்.

விநாயகர் சிலை
ஆண்டுதோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியன்று, அனைவரும் தங்கள் வீடுகளில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வைத்து, அருகம்புல், எருக்கம் பூ அரளி மலர் மாலைகள் அணிவித்து கொழுக்கட்டை, சுண்டல், பொரி, அவல் போன்றவற்றை படைத்து பக்தியோடு வழிபட்டு விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுகின்றனர்.

துரோக சிந்தனைகள்
சங்கடங்களையும், தடைகளையும் நீக்கவல்ல ஞானமுதல்வனை இந்த விநாயகர் சதுர்த்தி நன்னாளில் மனமுருக வணங்கி, சதுர்த்தி நாயகனின் அருளைப் பெற்று அனைவருக்கும் வெற்றிகரமான வாழ்க்கை அமையட்டும்; சகோதரத்துவம், மனிதநேயம் தழைக்கட்டும் வேற்றுமைகள் களைந்து ஒற்றுமை ஓங்கட்டும், நாடெங்கும் துரோக சிந்தனைகள் அழிந்து உண்மைகள் உயிர் பெறட்டும்;

அதிமுக பொதுச்செயலாளர்
நோய் நொடியற்ற ஆரோக்கியமான, சந்தோசமான வாழ்வு எந்நாளும் நிலைக்கட்டும் என்று வாழ்த்தி அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நெஞ்சார்ந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி. வணக்கம்" என கூறியுள்ளார். அதில் துரோக சிந்தனைகள் அழிந்து உண்மைகள் உயிர் பெறட்டும் என குறிப்பிட்டுள்ளதோடு, அதிமுக பொதுச்செயலாளர் என்றே குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications