அக்.16-இல் ஜெயலலிதா சமாதிக்கு செல்கிறாரா சசிகலா?.. மீண்டும் பரபரக்கும் மெரினா!
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு சசிகலா செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அக்டோபர் 17ஆம் தேதி அதிமுக தொடங்கப்பட்டதன் பொன் விழா ஆண்டு கொண்டாடப்படுவதையொட்டி இந்த நிகழ்வு நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா கடந்த பிப்ரவரி மாதம் தண்டனை முடிந்து விடுதலையானார். இதையடுத்து அவர் ஜெயலலிதா சமாதிக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கொரோனா பரவல் காரணமாக அவர் இதுவரை ஜெயலலிதா சமாதிக்கு வரவில்லை. எனினும் தொண்டர்களுடன் அவர் பேசி வருகிறார். இதனால் அதிமுகவை கைப்பற்ற மும்முரம் காட்டி வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது.

சசிகலாவுடன் பேசும் தொண்டர்கள்
ஒவ்வொரு முறையும் சசிகலாவுடன் பேசும் தொண்டர்கள் அவரை தலைமையேற்க வருமாறு அழைக்கிறார்கள். ஆனால் அதிமுக தலைமையோ அதிமுகவை பற்றி பேசுவதற்கோ உரிமை கொண்டாடுவதற்கோ சசிகலாவுக்கு எந்த உரிமையும் இல்லை. சசிகலாவிடம் பேசுபவர்கள் அமமுகவினர் தானேயொழிய அதிமுகவினர் அல்ல என திட்டவட்டமாக கூறிவிட்டார்கள்.

எம்ஜிஆர்
ஆயினும் எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டி காத்த அதிமுகவை மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்த்த வேண்டும் என சசிகலா கூறிவருகிறார். மேலும் தனக்கும் அதிமுகவுக்கும் சம்பந்தம் உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் அவைத் தலைவர் மதுசூதனன் மறைவுக்கும், ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி மறைவுக்கும் சசிகலாஅதிமுக கொடி பொருத்திய காரில் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

தொண்டர்கள் பலம்
இத்துடன் தன்னை எதிர்ப்பவர்களுக்கு தொண்டர்களின் பலத்தை நிரூபிக்க சசிகலா தமிழகம் முழுவதும் சூறாவளிச் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என தெரிகிறது. இந்த சுற்றுப்பயணத்தை ஜெயலலிதா சமாதியில் இருந்து தொடங்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. இத்தனை நாட்களாக கொரோனா 2-ஆவது அலை கடுமையாக இருந்ததால் அமைதியாக இருந்த சசிகலா தற்போது மூன்றாவது அலை தீவிரமடைவதற்குள் தனது பலத்தை நிரூபிப்பார் என தெரிகிறது.

50 ஆண்டுகள்
இந்த நிலையில் வரும் அக்டோபர் 17 ஆம் தேதி அதிமுக தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது. அதாவது பொன் விழா ஆண்டில் அதிமுக அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி வரும் 16ஆம் தேதி ஜெயலலிதா சமாதிக்கு சசிகலா செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது போல் ராமாவரம் எம்ஜிஆர் தோட்டத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 1972 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி மதுரையில் அஇஅதிமுகவை எம்ஜிஆர் நிறுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications